ஒரே ஒரு கேள்வி கேட்டதற்காக.. பிரபல நடிகையை 30 முறை கன்னத்தில் அறைந்த இயக்குநர்!
படப்பிடிப்பின் போது 30 முறை அடி வாங்கியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் பிரபல தைவான் நடிகை.
தைப்பே: விளம்பரப் பட படப்பிடிப்பின் போது, ஒரு கேள்வி கேட்டதற்காக நடிகை ஒருவரை இயக்குநர் முப்பது முறை கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் சில காட்சிகள் தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக நடிகர், நடிகைகளை இயக்குநர்கள் அடித்த சம்பவங்கள் பற்றி ஏற்கனவே நாம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், அவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடும்படி ஒரு சம்பவம் தைவானில் நடந்துள்ளது.
தைவானைச் சேர்ந்தவர் வு கே சி என்ற நடிகை. இவர் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் ஒருவரிடம் அடி வாங்கியது குறித்து கூறியுள்ளார். கேன்ஸ் பட விழாவில் கலந்து கொண்ட போது இந்த அதிர்ச்சித் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

படப்பிடிப்பு:
ஒரு விளம்பர படத்தின் படப்பிடிப்பின் போது இந்த சம்பவம் நடைபெற்றதாக வு தெரிவித்துள்ளார். சம்பவத்தின் போது அந்த இயக்குநர் நல்ல மது போதையில் இருந்துள்ளார். அவரிடம் சென்று தனக்கு லாங் ஷாட்டா? இல்லை குளோசப்பா எனக் கேட்டுள்ளார் வு. அக்காட்சிக்காக தன்னை தயார் படுத்திக் கொள்வதற்காக அப்படி அவர் கேட்டுள்ளார்.

இயக்குநர் கோபம்:
ஆனால், இந்தக் கேள்வியால் ஆத்திரமடைந்த இயக்குநர், அங்கிருந்த மற்றொரு நடிகரை அழைத்து, அவரைக் கொண்டு வுவின் கன்னத்தில் 30 முறை அடிக்க வைத்துள்ளார். அதனை படமாகவும் எடுத்துள்ளார். ஸ்கிரிப்டில் இப்படி ஒரு காட்சி இல்லாததால், படப்பிடிப்பில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவமானம்:
படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரையும் அழைத்து, அவர்கள் முன்னிலையில் வுவை அடிக்க வைத்துள்ளார் இயக்குநர். தன் ஆரம்ப காலத்தில் நடந்த இந்த சம்பவம் இன்று வரை தன் நினைவில் இருந்து நீங்க மறுப்பதாக சோகத்துடன் கேன்ஸ் பட விழாவின் போது தெரிவித்துள்ளார் வு.

பெண்களுக்கெதிரான வன்முறை:
வேலை பார்க்கும் இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக பலர் குரல் கொடுத்து வரும் வேளையிலும், இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறுவதை தவிர்க்க முடிவதில்லை என்பதையே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.


Click it and Unblock the Notifications











