தமிழ் நடிகனான எனக்கு இப்போதுதான் நிஜ வெற்றி கிடைச்சிருக்கு! - பாலா
தமிழ் நடிகனான எனக்கு வீரம் படம்தான் நிஜமான அடையாளத்தையும் வெற்றியையும் தந்துள்ளது என்கிறார் நடிகர் பாலா.
அன்பு என்று ஒரு படம் வந்ததே... நினைவிருக்கிறதா? அழகி என்ற அபார வெற்றிப் படம் தந்த நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில்தான் பாலா அறிமுகமானார். சுத்தத் தமிழ் நடிகர். தொடர்ந்து தொடர்ந்து 'காதல்கிசுகிசு' 'அம்மா அப்பா செல்லம்' போன்ற சில படங்களில் நடித்தார். ஆனால் அவை வெற்றி பெறவில்லை. அந்தக் குறையைப் போக்கியுள்ளது வீரம் படம்.

தமிழ் நடிகர்
இந்த பாலா நம் மண்ணின் மைந்தன். அதுவும் நீண்ட சினிமா பாரம்பர்யம் கொண்டவர்.
பாலாவின் தந்தை ஜெயக்குமார் 426 ஆவணப் படங்கள் மற்றும் விளம்பரப் படங்கள் இயக்கியவர். தாத்தா ஏ. கே. வேலன் தயாரிப்பாளர். அருணாச்சலம் ஸ்டுடியோவின் அதிபர். சகோதரர் சிவா இயக்குநர். சாதாரண இயக்குநர் இல்லீங்க... சிறுத்தை, வீரம் படங்களின் இயக்குநர்!!

44 படங்கள்
தமிழில் அறிமுகமானாலும் படங்கள் வெற்றி பெறாததால் மலையாளப் பக்கம் போனார். 'பிக்'பி' என்கிற மலையாளப் படத்தில் மம்மூட்டியுடன் நடித்தார் முதல் படத்திலேயே வெற்றியும் பாராட்டும் விருதும் கிடைத்தன.
அதன் பிறகு மளமளவென படங்கள். மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி, ப்ருத்விராஜ் என பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். பிறகு தனி நாயகனாகவும் நடிக்கத் தொடங்கி வெற்றி பெற்றார். ஒரே ஆண்டில் 9 படங்கள் நடிக்கும் அளவுக்குப் பரபரப்பானார். மலையாளத்தில் தொடர்ச்சியாக 40 படங்கள் நடித்துள்ளார். 'வீரம்' இவரது 44 வது படம் என்றால் பாருங்கள்!

மலையாள அனுபவம்
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டுமே மணம் உண்டு என்று நம்புகிறவர்கள் நம்மவர்கள். வேற்று மொழியினர் எவரையும் எளிதில் உள்ளே விடாதவர்கள் மலையாளத் திரையுலகினர். பாலாவுக்கு எப்படி அங்கு ஒரு இடம் கிடைத்தது?
"அதை என் விதி என்பதா, தலையில் எழுதப்பட்ட வாய்ப்பு என்பதா அதிர்ஷ்டம் என்பதா பாக்யம் என்பதா? எனக்குச் சொல்லத் தெரியவில்லை," எனும் பாலா தொடர்கிறார்.
"நான் அறிமுகமாகி தமிழில் நடித்த படங்கள் ஓடவில்லை. அதனால் எனக்கு இங்கே வாய்ப்பு வரவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடிப்பு, திறமை எல்லாம் இரண்டாம் பட்சம்தான். வெற்றி பெற்றால்தான் மறு பேச்சு. வெற்றி பெறவில்லை என்றால் அவ்வளவுதான்.
ஆனால் மலையாளத்தில் நிலைமையே வேறு. அங்கு வெற்றியைப் பார்ப்பதில்லை. வேலையைத்தான் பார்க்கிறார்கள். திறமைக்குத்தான் அங்கு மரியாதை. நடிகரைவிட நடிப்புத் திறமையைத்தான் பார்ப்பார்கள். நிஜமான திறமைசாலியை அங்கீகரிப்பார்கள். ஆதரிப்பார்கள். அதனால்தான் என்னை ஏற்றுக் கொண்டார்கள்," என்கிறார்.

மொழி தடையில்லை
"எனக்கு மொழி ஒரு தடையில்லை. இருந்தாலும் பிற மொழியிலிருந்து, என்னை மாதிரி பிற மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு அவ்வளவு சுலபமாக மலையாளத்தில் வரவேற்பும் அங்கீகாரமும் கிடைக்காது. இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு.என்னை ஏற்றுக்கொண்டு தங்களில் ஒருவராக பார்க்கிற அவர்களின் அன்புக்கு நான் எப்படி நன்றி சொல்வது? என் ஒவ்வொரு படத்திற்கும் அவர்கள் கொடுத்த வரவேற்புக்கும் விமர்சனத்துக்கும் என்னால் நன்றி என்று மட்டும் கூறி விட முடியாது," என்று நெகிழ்கிறார் பாலா.

சங்கடம்
இருந்தாலும் இவருக்குள் ஒரு சங்கடம் தொண்டைக்குள் பந்தாக இதுநாள் வரை உருண்டு கொண்டிருந்தது. அதை 'வீரம்' படம் அகற்றியுள்ளது.
"நான் தமிழில்தான் அறிமுகமானேன். இங்கு சரிவர படங்கள் அமையாததால்தான் மலையாளப் பக்கம் போனேன். அங்கு பலதரப்பட்ட படங்கள். வியாபாரரீதியில் வெற்றி பெற்ற 'பிக் பி', 'புதியமுகம்', 'ஸ்தலம்', 'திஹிட்லிஸ்ட்', 'அலெக்சாண்டர் தி கிரேட் போன்ற படங்களாகட்டும்
'வேனல் மரம்,' 'பத்தாம் அத்தியாயம்' போன்ற மாற்றுப் படங்களாகட்டும்... ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவமாக என்னை செதுக்கியது உண்மை.

வீரம் வந்தது
அப்போதெல்லாம் நான் நினைப்பதுண்டு இங்கு நம்மைப் பாராட்டுகிறார்கள். வரவேற்கிறார்கள். திறமைக்கு இங்கு மரியாதை உள்ளது. ஆனால் தாய் மொழியில் நமக்கென்ன மரியாதை உ.ள்ளது என்று நினைப்பதுண்டு. அப்படிப்பட்ட நேரத்தில்தான் 'வீரம்' பட வாய்ப்பு வந்தது.

அண்ணன் சிவா
இயக்குநர் சிவா என் அண்ணன்தான். நானும் மலையாளத்தில் ஒரு படம் இயக்கி விட்டடேன். ஆனாலும் நான் அவரிடம் வாய்ப்பு கேட்டதில்லை. அவரும் என்னைப் பற்றி விசாரித்து பேசியதில்லை. அப்படிப்பட்ட சுதந்திர வெளியில் இருந்தோம்.
'வீரம்' படத்தில் நடிக்கக் கேட்ட போது அண்ணனின் படத்தில் நடிக்கும் தம்பி என்கிற வகையிலும் அஜீத் சாரின் தம்பியாக நடிக்கிறேன் என்கிற வகையிலும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.. பல நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் இனிமையாகக் கழிந்தது. படமும் வெற்றி பெற்றது எனக்கு நீண்டநாள் நெஞ்சுக்குள் கிடந்த ஏக்கம், சங்கடம், உறுத்தல், விலகிய உணர்வில் இருக்கிறேன், "என்கிறார்

தி ஹிட் லிஸ்ட்
பாலா தான் இயக்கிய 'தி ஹிட் லிஸ்ட்' பட அனுபவம் பற்றிக் கூறும் போது, "இது எனக்கு 30 வயதில் கிடைத்த வாய்ப்பு. நானே தயாரித்தேன். 40 நடிகர்கள் என் மீதுள்ள அன்புக்காக நடித்தார்கள். ஒரு பத்தாண்டு கால அனுபவம் ஒரு படத் தயாரிப்பில் கிடைத்தது. எல்லா நடிகர்களும் ஒரு படம் தயாரித்தால் நல்ல மனிதராக மாறிவிடுவார்கள், " என்கிற பாலாவின் மனைவி அம்ருதா, பாடகியாக வந்து காதலியானவர். இவர் நினைக்கிற ஸ்வரத்தில் தாம்பத்யசங்கீதம் பாடுகிற பாடகி. ஒரே மகள் அவந்திகா. இதுதான் பாலா!


Click it and Unblock the Notifications











