மயக்க மருந்து கொடுத்து ஆபாசப்படம் எடுத்து மிரட்டுகிறார்.. துணை நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்!
ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக துணை நடிகர் மீது நடிகை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை: மயக்க மருந்து கொடுத்து தன்னை ஆபாசப்படம் எடுத்து மிரட்டுவதாக துணை நடிகர் மீது, நடிகை ஜெனிபர் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் (21). துணை நடிகையான இவர் குறும்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவருக்கும் துணை நடிகர் பக்ருதீன் (45) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்துள்ளது. தொழில்ரீதியாகவும் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.

வீடியோ
இந்தச் சூழ்நிலையில், சமீபத்தில் ஒரு நாள் பக்ரூதினைப் பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் ஜெனிபர். அப்போது, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஜெனிபரை பக்ருதீன் பலாத்காரம் செய்ததாகவும், அதனை வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொலை மிரட்டல்
அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி, அவர் தொடர்ந்து ஜெனிபரிடம் பணம் பறித்து வந்துள்ளார். அதோடு, கடந்த 20ம் தேதி ஜெனிபரின் தாயை கொலை செய்து விடுவதாக பக்ருதின் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

போலீசில் புகார்
அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக ஜெனிபர் வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் கடந்த சனிக்கிழமையன்று இரவு புகார் ஒன்றை அளித்துள்ளார். முன்னதாக அவர் காவல் நிலைய வளாகத்தில் தீ குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெனிபரின் இந்த புகாரைத் தொடர்ந்து பக்ருதீன் மீது கொலை மிரட்டல் விடுத்தல், வன்புணர்ச்சி செய்தல் மற்றும் அடித்து துன்புறுத்துதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பண மோசடி
பக்ருதீனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஜான்சி குறும்படங்களில் நடிப்பவர் என்பதும், நட்பு ரீதியாக ஜான்சி பக்ரூதினிடம் ரூ.1.5 லட்சம் பணம் வாங்கியதாகவும், அந்த பணத்தை திருப்பிக் கேட்டதாலேயே கோபத்தில் தன் மீது போலீசில் இப்படி அவதூறு புகார் கொடுத்திருப்பதாகவும் பக்ருதீன் தெரிவித்துள்ளார்.

போலீஸ் விசாரணை
ஏற்கனவே ஜெனிபர் மீது பக்ரூதின் புழல் காவல் நிலையத்தில் பண மோசடி புகார் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கு பதிலடி தரும் விதமாகவே தற்போது ஜெனிபர் இந்த பாலியல் புகாரை பக்ருதீன் மீது சுமத்தியிருப்பதாக பக்ரூதின் தரப்பினர் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் யார் சொல்வது உண்மை என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











