Ponnambalam - அஜித் என்னை நலம் விசாரிக்காததற்கு இதுதான் காரணம்.. பொன்னம்பலம் ஓபன் டாக்
சென்னை: Ponnambalam (பொன்னம்பலம்) அஜித் தன்னை நலம் விசாரிக்காததற்கான காரணத்தை நடிகர் பொன்னம்பலம் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வில்லனாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் பொன்னம்பலம். ஆஜானுபாகுவான உடலும், வித்தியாசமான முக பாவனையும் என ஒரு காலத்தில் திரையுலகை கலக்கியவர் பொன்னம்பலம். இப்போது திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

அபூர்வ சகோதரர்கள்: சண்டைக் கலைஞராக இருந்த பொன்னம்பலம் கமல் ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் மூலம் முழு நேர நடிகராக அறிமுகமானார்.அதன் பிறகு வெற்றிவிழா, மைக்கேல் மதன காம ராஜன், நாட்டாமை, பெரிய மருது, மாநகர காவல் என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார். குறிப்பாக நாட்டாமை படத்தில் அவரது நடிப்பு இன்றுவரை மீம் மெட்டீரியலாக இருப்பது கவனிக்கத்தக்கது. மேலும், அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் பொன்னம்பலம்
பிக்பாஸ்: முன்னணி நடிகராக வலம் வந்த பொன்னம்பலத்துக்கு ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. இதனையடுத்து கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் கலந்துகொண்ட சீசனில் சிறப்பாகவே விளையாடினார். இருந்தாலும் அவரால் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல முடியவில்லை. எனினும், பிக்பாஸ் மூலம் மீண்டும் திரையுலகில் ஒரு ரவுண்டு வரலாம் என அவர் கணக்கு போட்டிருந்தார். ஆனால் அதுவும் பொய்த்துப்போனது.
உடல்நலக்குறைவு: சூழல் இப்படி இருக்க பொன்னம்பலத்துக்கு சிறுநீரகத்தில் பிரச்னை வந்தது. எனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து உடல்நலம் தேறியது. தான் உடல்நலக்குறைவில் இருந்தபோது தனக்கு தனுஷும், சிரஞ்சீவியும் அதிக அளவு உதவியதாக பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருந்தார் பொன்னம்பலம். அதேசமயம் அஜித் தனக்கு உதவவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பொன்னம்பலம் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித் குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய பொன்னம்பலம், "முகவரி, அமர்க்களம் போன்ற படங்களில் பணியாற்றும்போது ஒருமுறை அஜித் சட்டையை கழற்றி காண்பித்தார். அப்போது அவருக்கு ஏகப்பட்ட தையல்கள் போடப்பட்டிருப்பதை பார்த்து ஷாக் ஆகிவிட்டேன். ஸ்டண்ட் ஆர்ட்டிஸ்ட்டான எனக்கே அவ்வளவு தையல்கள் போடவில்லை.
அஜித் செய்த உதவி: ஒருமுறை எனது நண்பரின் மகனுக்கு ஃபீஸ் கட்ட பணம் தேவைப்பட்டது. பிரபு, குஷ்பூ உள்ளிட்டோர் உதவி செய்தனர். இருப்பினும் 50,000 ரூபாய் தேவைப்பட்டது. உடனே அஜித்திடம் சென்றேன். அதை பொறுமையாக கேட்டுக்கொண்டார். மீண்டும் அதை நியாபகப்படுத்தலாம் என்ற நினைப்பில் படப்பிடிப்பு இடைவேளையில் அவரிடம் சென்று சொன்னேன். அதற்கு அவரோ, 'அண்ணா அந்தப் பணத்தை ஷாலினியை வைத்து காலையிலேயே கட்டிவிட்டேன்' என சொன்னார். அந்த நிகழ்வுதான் அவர் மேல் எனக்கு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது.
இதனால்தான் நலம் விசாரிக்கவில்லை: எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது ரஜினி, கமல், தனுஷ், சிரஞ்சீவி என பலரும் நலம் விசாரித்தனர். ஆனால் அஜித் விசாரிக்கவில்லையே என்ற கவலை இருந்தது. அதன் பிறகுதான் தெரிந்தது அந்த சமயத்தில்தான் அஜித்தின் அப்பாவுக்கும் ரொம்பவே முடியவில்லை. எனவே அதில் கவனம் செலுத்தியிருப்பார். அதனால்தான் என்னை பற்றி யோசித்திருக்கமாட்டார் என நினைத்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











