தமிழ் சினிமா 2017: சிலிர்த்து எழுந்த நயன்தாரா!
நயன்தாரா! நடிகைகளில் சூப்பர் ஸ்டார். தென்னிந்திய மொழிகளில் இதுவரை எந்த நடிகையும் வாங்காதளவுக்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகை! நடிக்க வந்து பதினான்கு ஆண்டுகளாகிறது, இப்பவும் நம்பர் ஒன் இடத்தைத் தக்கவைதிருக்கிறார்.
சிம்புடன் காதல்...பிரபுதேவாவோடு திருமணம்... இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொன்னது... இதெல்லாம், மீடியாவுக்கு ஒரு 'ஹெட்லைன்' போட்டு அவ்வப்போது பரபரப்பைப் பற்றவைப்பதற்கான தீனி; அவ்வளவே!

இதுவா நயன்தாரா?! நடிக்க வந்தபோது அமுல்பேபி மாதிரி இருந்ததனாலோ என்னவோ சினிமாவின் சூட்சுமங்களோ, அரசியலோ அவருக்குப் பிடிபடவில்லை. கஜினி படத்தில் நயன்தாராவை வைத்து எடுக்கப்பட்ட பல காட்சிகள் நீளம் காரணமாக வெட்டி எறியப்பட்டன. அதுபோல் அவர் கடந்து வந்த அவமானங்களும், துயரங்களும் அதிகம்! அதெல்லாம் கடந்து வந்ததுதான் இந்த உயரம். நம்பர் ஒன் அந்தஸ்தில் இருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நம்பர் ஒன் ஆளாக வந்து நிற்கிற வழக்கத்தை இன்றுவரை மாற்றிக்கொண்டதில்லை!
நயன்தாராவுக்கு முன்பு நடிக்கவந்த ஹீரோயின்கள், ஹீரோக்கள், பலரும் இப்போதும் இருக்கிறார்கள். சினிமா வாழ்க்கை முடிந்து போனால், தற்போதுள்ள ஆடம்பர வாழ்க்கைக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக சம்பாதித்த பணத்தை 'மால்களிலும்', கல்யாண மஹால்'களிலும் முதலீடு செய்திருப்பவர்கள் இங்கு அதிகம். நயன்தாராவும் கூட அப்படி முதலீடு செய்திருக்கக் கூடும். அதை தவறு என்று யாரும் சொல்லமுடியாது. சில நடிகர்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை சினிமாவிலும் முதலீடு செய்திருக்கிறார்கள். எப்படி? தங்கள் மார்கெட் ரேட்டையும், கிடைக்கிற லாபத்தையும் தங்களைவிட்டு வெளியில் போகாமல் இருப்பதற்காக! ஆரோக்கியமான, தரமான படங்கள் எடுக்க முதலீடு செய்பவர்கள், பிரகாஜ்ராஜ் மாதிரி ஒரு சிலர்தான். இவர்கள் எவருக்கும் இல்லாத துணிச்சல் நயன்தாராவுக்கு மட்டுமே!
கடந்த இந்த ஆண்டில் அஜித், விஜய், சூர்யா,தொடங்கி முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் பல ரிலீஸ் ஆகியிருக்கின்றன. அந்தப் படங்கள் உண்மையில் அதன் தயாரிப்பளர்களையோ அல்லது அவர்களது ரசிகர்களையோ முழுசாக திருப்தி செய்த படங்கள் என்று யாராவது உறுதியாகச் சொல்ல முடியுமா!?

ஆனால் அப்படி ஒரு திருப்தியான படத்தை ஒரு நடிகையாக நயன்தாரா கொடுத்திருக்கிறாரே அதுதான் இந்த ஆண்டின் ஆகச் சிறந்த படைப்பு. அருவி மாதிரி வேறு சில படங்களும் இந்த வரிசையில் சேர்த்துக்கலாம். ஆனால் 'அறம்' தனித்து நிற்பதற்கு காரணம் நயன்தாரா.
கோபி நயினார் என்ற படைப்பாளி 'அறம்' படத்திற்கு அப்புறம் அடையாளம் காணப்பட்டவர். இயக்குநர் முருகதாஸின் 'தயவால்' மீஞ்சூர் கோபி' என்ற பெயர் மட்டும் தமிழ் சினிமா ரசிகனுக்குத் தெரியும். வழக்கமான கமர்சியல் படம் பண்ணுகிற ஹீரோக்களை விட்டுவிடுவோம். அரசிலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நம்புகிற எந்த ஹீரோவுக்கும் 'மீஞ்சூர் கோபி' என்ற படைப்பாளி இப்படியொரு கதை வைத்திருப்பது எப்படித் தெரியாமல் போனது? அல்லது தெரியவிடாமல் பார்த்துக்கொண்ட சக்தி எது? யாரோ ஒருவர் சொல்லித்தானே மீஞ்சூர் கோபியிடம் கதை கேட்க, நயன்தாரா ஒப்புக்கொண்டிருப்பார். இத்தனைக்கும் விளிம்புநிலை மக்களின் 'வலி'யைச் சொல்கிற படம். நடிகையாக இருந்தாலும் எங்கோ ஓரிடத்தில் இதுபோன்ற மனிதர்களை நயன்தாரா கடந்திருக்க வேண்டும். அதன் தொடர்சியாகதானே இந்தப் படம். இந்த 'அறம்' ஏன் பிற நடிகர்களிடம் இல்லை!?

காசு, பணம் மட்டுமே சினிமா என்பதைத் தவிர்த்து, நல்ல கதையை எப்போது நம்புகிறார்களோ அப்போதுதான் சினிமா உருப்படும்; உலக சினிமா வரும்! அதன் முதல் புள்ளியை 2017-ல் வைத்திருக்கிறார் நயன்தாரா; ஹீரோக்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
- வீகே சுந்தர்


Click it and Unblock the Notifications











