தற்கொலை முயற்சியில் தமிழ் சினிமா!
தமிழகத்தில் மூடப்பட்டு இருந்த தியேட்டர்கள் இன்று முதல் திறக்கப்படுகிறது. தமிழக அரசுடன் சினிமா சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதால் தியேட்டர்கள் திறக்கப்படுகிறது பிரச்சினைக்கு தீர்வு கண்ட தமிழக அரசுக்கு நன்றி என அபிராமி ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆனால் அவர் சொல்லாமல் மறைத்த விஷயம், "தியேட்டரை மூடிட்ட அரசாங்கம் பயந்திருமா? உங்களால் என்ன செய்ய முடியும்? நேர்மையான கணக்கு உங்களிடம் இருக்கிறதா?" என அமைச்சர்கள் சினிமா சங்க பிரதிநிதிகளை அவமானப்படுத்தியதை!

இனியும் திரையரங்குகளை திறக்கவில்லை என்றால் வேறு மாதிரியான பிரச்சினைகள் தனக்கு தொழில் ரீதியாக வரும் என்பதால் மந்திரிகள் சொன்னதை சங்கரமட கோவில் மாடு மாதிரி ஆமாம் சாமி போட்டு தியேட்டரை திறப்பதாக அறிவித்துவிட்டார் அபிராமி ராமநாதன். தற்போதுள்ள டிக்கட் கட்டணத்துடன் GSTவரி கூடுதலாக வசூலித்து கொள்ளுங்கள். கேளிக்கை வரி தற்போது செலுத்த வேண்டாம். குழு அமைத்து அதில் விவாதித்து வரியை தீர்மானிக்கலாம் என அரசு தரப்பில் உறுதி கொடுக்கப்பட்டதாக அபிராமி ராமநாதன் கூறுகிறார். இதற்கு எந்தவித எழுத்து பூர்வமான ஆவணங்கள் அரசு தரப்பில் வழங்கப்படவில்லை.
தியேட்டர் கட்டணங்களுக்கு அதிலிருந்துதான் GST வரி செலுத்தப்பட வேண்டும் ஆனால் தற்போதைய டிக்கட் கட்டணத்திற்கு ஏற்ப பார்வையாளனிடம்GSTவரி பணத்தை கூடுதலாக வசூலிக்க தியேட்டர்கள் தொடங்கி விட்டன. பெருநகரங்களை தவிர்த்து புற நகர் பகுதிகளில் 30, 50க்கு மேல் டிக்கட் கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வில்லை. நடைமுறையில் 100 ரூபாய்க்கு டிக்கட் விற்கப்படுகிறது இதற்கு GST 18 ரூபாய் 118க்கு டிக்கட் விற்கப்படும் போது குடும்பங்களோடு படம் பார்க்கும் பார்வையாளரகன் தியேட்டருக்குவர மாட்டார்கள். அரசுக்கு 50 ரூபாய்க்கு மட்டுமே தியேட்டர் நிர்வாகம் வரிகட்டும், வரி ஏய்ப்பு தொடரும். இதற்கு மறைமுகமாக ஆதரவு தரும் அரசாங்கம் சொல்வதை தியேட்டர் உரிமையாளர்கள் கேட்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இதனால் மொத்தமாக பாதிக்கப்பட போவது படம் பார்க்க வரும் பொதுமக்களும், படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களும்தான்.
தியேட்டர் தொழிலை எப்படி நடத்த வேண்டும் என்பதை தமிழக அரசு தன் கட்டுப்பாட்டிற்குள் மிரட்டியே கொண்டு வந்துவிட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரி 30% சதவீதம் என்பதை சட்டமன்றத்தில் சட்டமாக்கிவிட்டது தமிழக அரசு. தியேட்டர் கேன்டீனில் சட்டத்துக்கு புறம்பாக நான்கு மடங்கு விலையில் உணவு பொருட்களை விற்பதை அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கும்பட்சத்தில் அதற்கான பிரதிபலனை அரசு எதிர்பார்க்க தொடங்கும்.
மொத்தத்தில் uடம் பார்க்க வருபவனும், படம் தயாரிக்கும் தயாரிப்பாளரும் தங்கள் பணத்திற்கு பலனும், லாபமும் எதிர்பார்க்கவோ, உரிமை கோரவோ முடியாத நிலையை சினிமா நாட்டாமைகள் - அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனை சரிசெய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திடம்தான் உள்ளது. செய்யத் தவறும் பட்சத்தில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தற்கொலை பாதையை நோக்கி பயணிப்பதாகிவிடும். விஷால் விழித்து கொண்டு அரசுடன் போராடி டிக்கட் கட்டணத்தையும், உணவுப் பண்டங்களின் விலையையும் வரை முறைப்படுத்த வேண்டிய கடினமான பணியை செய்ய வேண்டிய கட்டாயம் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இருக்கிறது.


Click it and Unblock the Notifications











