வாழ்த்துகள் முதலாளி.. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திரைத்துறையிலிருந்து குவியும் வாழ்த்து
சென்னை: தமிழ்நாட்டின் அமைச்சராக பொறுப்பு வகித்துவந்த உதயநிதி ஸ்டாலின் இப்போது தமிழ்நாடு துணை முதலமைச்சராக மாறியிருக்கிறார். நீண்டகாலமாகவே இந்தப் பதவி அவருக்கு கிடைக்கும் என்று கட்சியினரால் எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் திரைத்துறையிலிருந்தும் வாழ்த்துகள் குவிய ஆரம்பித்திருக்கின்றன.
அரசியல் குடும்பத்தில் பிறந்த உதயநிதி ஸ்டாலினுக்கு ஆரம்பத்தில் பெரிதாக அரசியல் ஆசை இல்லை. மாறாக சினிமாவை தயாரிப்பதும், விநியோகம் செய்வதுமாக இருந்தார். ஆதவன் படத்தில் சின்ன ரோலில் நடித்த அவர்; ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனையடுத்து அவர் நடித்த சில படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்தன. அதேசமயம் நிமிர், கண்ணே கலைமானே, மனிதன், கலகத் தலைவன், நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்கள் அவரது திறமையை காண்பிக்கும் விதமாக அமைந்தன.

மாமன்னன்: சூழல் இப்படி இருக்க கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார். பிறகு அமைச்சரானார். இதற்கிடையே சினிமாவிலிருந்து ஒதுங்க முடிவு செய்த அவர் கடைசியாக ஒரு படத்தில் நடிக்க முடிவெடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்தார். மாமன்னன் படம் யாரும் பேசாத அரசியலை பேசி மெகா ஹிட்டானது. இதன் காரணமாக பரம திருப்தியோடு சினிமாவிலிருந்து ஒதுங்கிய உதயநிதி அரசியலில் முழுக்க முழுக்க கவனம் செலுத்த் ஆரம்பித்தார்.
துணை முதலமைச்சர்: அமைச்சராக தனது பணிகளை செய்துவந்த உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சிக்குள்ளும், சில அமைச்சர்கள் மத்தியிலும் கருத்துக்கள் எழுந்தன. ஆனால் இப்போது அவருக்கு துணை முதலமைச்சர் பதவியை கொடுத்தால் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கு மேலும் வலு கூடிவிடுமோ என்றும் ஒரு அச்சம் சின்னதாக இருந்தது. இந்தச் சூழலில் எதைப் பற்றியும் யோசிக்காமல் துணை முதலமைச்சர் பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
குவியும் வாழ்த்து: எதிர்க்கட்சியினர் வழக்கம்போல் உதயநிதி ஸ்டாலினையும், திமுகவையும் இந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். ஆனால் திமுகவினர் இந்த நிகழ்வை கொண்டாடிவருகின்றனர். இப்போது கொடுத்ததுதான் சரி; ஏனெனில் இப்போதிருந்தே பணிகளை ஆரம்பித்தால்தான் அடுத்த தலைவராகவும், முதலமைச்சராகவும் உதயநிதி உருவெடுக்க முடியும் என்று சந்தோஷத்தோடு கூறிவருகிறார்கள் பெரும்பான்மையான திமுகவினர். இந்தச் சூழலில் உதயநிதிக்கு திரைத்துறையிலிருந்தும் வாழ்த்துகள் குவிய ஆரம்பித்திருக்கின்றன.
திரைத்துறையினர் வாழ்த்து: அந்தவகையில் நடிகர் ஜெயம் ரவி தனது எக்ஸ் தள பக்கத்தில், "தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகியிருப்பதற்கு வாழ்த்துகள் உதயநிதி பிரதர். உங்களது தலைமைப் பண்பு இளைஞர்களின் வளர்ச்சி, அதிகாரம், சமூக நலன் உள்ளிட்டவைகளுக்கு புதிய நம்பிக்கையை கொடுக்கும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். நடிகர் சிம்பு தனது எக்ஸ் தளத்தில், 'வாழ்த்துகள் உதயநிதி அண்ணா. இன்னும் பல சாதனைகள் இருக்கின்றன' என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், 'வாழ்த்துகள் உதயநிதி சார்' என்று கூறியுள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இதயப்பூர்வமான வாழ்த்துகள் முதலாளி.இந்த பதவியிலும் நீங்கள் பெரிய வெற்றியை பெற வேண்டும்" என்று கூறியுள்ளார்.நடிதர் தனுஷ் தெரிவித்திருக்கும் வாழ்த்தில், 'தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அண்ணனுக்கு வாழ்த்துகள்' என்று குறிப்பிட்டிருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன், 'துணை முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது வாழ்த்தில், "துணை முதலமைச்சராக உதயநிதியின் பேராற்றல் மிக்க பணி சிறக்கவும், புகழ் சிறக்கவும் வாழ்த்துகள் என்று கூறியிருக்கிறார். அதேபோல் வெங்கட் பிரபு, "நீங்கள் துணை முதலமைச்சராகவும், தலைவராகவும் நமது மக்களுக்கு அற்புதங்களை செய்வீர்கள் உதயநிதி" என புகழாரம் சூட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











