போதை யாருக்கு கேடு? திரைத்துறையைச் சுற்றி ஏன் இவ்வளவு சர்ச்சைகள்.. எல்லாமே ஒரே போதையா இருக்கேப்பா?
சென்னை: கடந்த ஆண்டு கேரள திரையுலகைச் சுற்றி வளைத்து அடித்த விஷயம் என்றால் அது ஹேமா கமிட்டி விவகாரம். இதன் மூலம் கேரள திரையுலகில் நடிகைகளை, பெண் தொழில் நுட்பக் கலைஞர்களை பாலியல் ரீதியாக அனுகிய பலரது பெயர்கள் வெளியே வந்தது. இயக்குநர்கள், நடிகர்கள் என சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இதனால் கேரள நடிகர் சங்கம் முழுவதுமாக கலைக்கப்பட்டது. இந்த ஆண்டு தமிழ் திரையுலகை போதை சமாச்சாரங்கள் சுற்றி சுற்றி அடித்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், தமிழ்நாடு மதுபான ஊழல் வழக்கில் அவருக்கும் தொடர்பு இருக்கிறது என்ற கோணத்தில் தகவல்கள் வெளியானது. இதனால் அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்டவை சீல் வைக்கப்பட்டது. ஆகாஷ் பாஸ்கரன் மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் நடிகை ஒருவருக்கும் முக்கியமான தொடர்பு இருப்பதாக தகவல்கள் கசிந்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மேலும் சீல் வைக்கப்பட்ட ஆகாஷ் பாஸ்கரன் வீடு, மற்றும் அலுவலத்தை அவரிடம் திருப்பித் தர நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, திருப்பிக் கொடுக்கப்பட்டது. ஆனாலும் வழக்கு விசாரணையில் தான் உள்ளது.
இந்த பிரச்னை இப்படி இருக்க, தற்போது கோலிவுட் வட்டாரத்தை சுழற்றி அடிக்கும் விஷயமாக இருப்பது, போதைப்பொருளான கொக்கைன் விநியோகம் மற்றும் பயன்பாடுதான். இந்த வழக்கில் இதுவரை திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவை காவல்துறை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் அவர்களின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது.

முன்னணி பிரபலங்கள்: அவர்கள் இருவரிடமும் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த வழக்கில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளும் சம்பந்தப்பட்டிருப்பதாக திரைத்துறை வட்டாரத்திலேயே பேச்சுகள் ஓடிக்கொண்டு உள்ளது. ஏற்கனவே நடிகர்கள் இருவர் கைது செய்யப்பட்டதே பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பிய நிலையில், ரசிகர்களோ தற்போது தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்த அவ நம்பிக்கைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். ரசிகர்கள் எழுப்பும் கேள்வி நியாயமானதுதான் என்ற எண்ணமும் எழாமல் இல்லை.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட: அதாவது நடிகர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள், பள்ளி, கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு நடிகர்கள், நடிகைகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். பலரும் அழைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். மாணவர்களை சந்தித்து போதைக்கு அடிமையாகாதீர்கள், போதையின் பாதையில் செல்லாதீர்கள் எனக் கூறும் பல பிரபலங்கள், இந்தியாவில் தடை செய்யப்பட்ட கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டும் விநியோகம் செய்து கொண்டும் இருப்பது உள்ளபடியே அதிர்ச்சி தான்.
நடிகர்கள் நடிகைகளுக்கு: படம் திரையிடுவதற்கு முன்னர், திரையரங்கில் போடப்படும் டைட்டில் கார்டில், வரும் புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும், புற்றுநோயை உண்டாக்கும், மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் எனக் கூறும் நடிகர்களும் நடிகைகளும் அதனை ரசிகர்களுக்கு மட்டும் சொல்கிறார்கள். ஆனால் கொக்கைன் போன்ற போதைப் பொருளை பயன்படுத்தும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்காகவே, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துதல் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் எனவும் சேர்த்துக் கொள்வது நல்லது என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல் இல்லை.


Click it and Unblock the Notifications











