சென்னை சினிமா பைனான்ஸியர் மலேசியாவில் கொலை?
சென்னை: சென்னையைச் சேர்ந்த சினிமா பைனான்ஸியர் முத்துராஜா மலேசியாவில் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் சினிமா பைனான் சியர் முத்துராஜா. மலேசியாவுக்கு சென்ற இடத்தில் திடீரென காணாமல் போனார். வக்கீல் சகோதரர்களான பத்மநாபன், சுரேந்திரன் ஆகியோரை பார்க்க சென்ற முத்துராஜா, கொலை செய்யப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
வக்கீல் சகோதரர்களுக்கும், முத்துராஜாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. இது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வக்கீல் சகோதரர்கள் இருவரும் முத்து ராஜாவை தீர்த்துக் கட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.
வக்கீல் சகோதரர்களான பத்மநாபன், சுரேந்திரன் இருவரையும் மலேசிய போலீசார் கைது செய்தனர். இவர்களது கூட்டாளிகள் 8 பேரும் முதலில் கைது செய்யப்பட்டனர். தற்போது சுரேஷ், முரு என்ற மேலும் இருவர் சிக்கியுள்ளனர்.
இதுவரை 10-க்கும் மேற்பட்டவர்களை இக்கும்பல் கொன்று குவித்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் பலர் இவர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே முத்துராஜாவை பத்திரமாக மீட்டு தருவதற்காக மலேசியாவில் இருந்தபடியே ஒரு கும்பல் ரூ.10 லட்சம் பேரம் பேசிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள முத்துராஜாவின் மனைவி உஷாராணியை போனில் தொடர்பு கொண்டு 2 பேர் பேசியுள்ளனர். இது குறித்து 20 முறை தன்னிடம் போனில் இந்த கும்பல் பேசியதாக உஷாராணி போலீஸில் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், முத்துராஜாவின் முதல் மனைவியான ராஜலட்சுமி, தனது கணவர் கொல்லப்பட்டாரா, இல்லையா என்பது குறித்து விசாரித்து தெரிவிக்க வேண்டும் என்று கோரி முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











