தமிழ் சினிமா கவலைப்பட தேவையில்லை... மணிரத்னம் கொடுத்த சூப்பர் பதில்
சென்னை : பான் இந்தியன் படங்களின் பிளாக் பஸ்டர் வெற்றி பற்றிய கேள்விக்கு டைரக்டர் மணிரத்னம் அளித்துள்ள சூப்பர் பதில் அனைவரின் கைதட்டலையும் பெற்றுள்ளது.
இந்தியாவின் திறமையான டாப் டைரக்டர்களில் ஒருவராக இருப்பவர் மணிரத்னம். 1983 ம் ஆண்டு பல்லவி அனு பல்லவி என்ற கன்னட படத்தின் மூலம் டைக்டராக அறிமுகமானவர் மணிரத்னம். தமிழில் இவர் இயக்கிய முதல் படம் பகல் நிலவு. வித்தியாசமான கதை, அற்புதமான பாடல்கள் ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்ட இந்த படம் செம ஹிட் ஆனது.

அத்தனை படங்களும் ஹிட்
தொடர்ந்து தமிழில் இவர் இயக்கிய இதய கோயில், மெளன ராகம் , நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி, அஞ்சலி, தளபதி, ரோஜா என அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. மணிரத்னம் படம் என்றாலே சூப்பர் ஹிட் என்ற பெயர் இப்போது வரை நிலைத்து வருகிறது. தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் சூப்பர் ஹிட் படங்கள் பலவற்றை இயக்கி உள்ளார் மணிரத்னம். அதிலும் நாயகன், ரோஜா போன்ற படங்கள் மாஸ்டர் பீஸ்.

மிகப்பெரிய வரலாற்று காவியம்
டைரக்டராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்துள்ளார். இவர் இயக்கிய ஒரு சில படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் மணிரத்னம் இயக்கிய அத்தனை படங்களும் மிக பிரபலமானவையாக உள்ளன. இதுவரை இவர் இயக்கிய படங்களின் உச்சமாக தற்போது மிகப் பெரிய வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவாக இயக்கி உள்ளார். இதுவரை பலர் முயற்சி செய்து தோற்று போன இதை மணிரத்னம் முதல் முறையாக சாத்தியமாக்கி உள்ளார்.

இந்திய சினிமாவே எதிர்பார்க்கிறது
இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை மணிரத்னம் இயக்கி முடித்துள்ளார். இரண்டாம் பாகத்தின் வேலைகளையும் பாதி முடித்து விட்டதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ளது. சமீப காலமாக தமிழ் சினிமாக்களின் தரம் குறைந்து விட்டதாகவும், பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என கூறப்பட்டு வருவதற்கும் பொன்னியின் செல்வன் தான் பதில் சொல்லும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் சினிமா கவலைப்பட தேவையில்லை
இந்நிலையில் சமீப காலமாக பாகுபலி, புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் என பிற மொழி படங்கள், பான் இந்தியன் படங்கள் வசூல் சாதனை படைத்து வருவது பற்றியும். தமிழ் சினிமாவில் அப்படி எந்த படமும் வருவதில்லை என்பது பற்றியும் மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மணிரத்னம், பிற மொழி படங்களின் வெற்றியைக் கண்டு தமிழ் சினிமா கவலைப்பட தேவையில்லை. தமிழ் சினிமாவில் உள்ள பல இளம் திறமையாளர்கள் புதிய கதவுகளை திறந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

என்னன்னு நாங்க காட்டுறோம்
மணிரத்னத்தின் இந்த பதிலை பலரும் கைதட்டி வரவேற்றுள்ளனர். உண்மையான பான் இந்தியன் படம்ன்னா என்னன்னு நாங்க காட்டுறோம். அது பொன்னியின் செல்வன். இது பொன்னியின் செல்வனின் நேரம் என பலரும் பெருமையாக கமெண்ட் செய்து வருகின்றனர். பாகுபலி, கேஜிஎஃப் என அனைத்து படங்களின் வசூல் சாதனையையும் பொன்னியின் செல்வன் முறியடிக்கும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











