புரோமோஷனுக்கு நோ சொல்லும் நடிகர்-நடிகைகள்.. திருந்த வேண்டியது தயாரிப்பாளர்கள் தான்!
சென்னை: தமிழ் சினிமாவில் இருக்ககூடிய நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையில் பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இது ஒரு சுமூகமான முடிவுக்கு எப்போது வரும் என்ற கேள்விகள் அனைவருக்கும் இருக்கும் நேரத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நாற்கரப்போர் படக்குழுவினர் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுரேஷ் காமாட்சியின் பேச்சில் நியாயம் இருப்பதாக பலர் தங்களது கருத்தினைத் தெரிவித்து வருகின்றனர்.
அதாவது படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. இது போன்ற நடிகர் நடிகைகள் என்பவர்கள் தமிழ் சினிமாவின் சாபக்கேடு. இவர்கள் தமிழ் சினிமாவுக்குத் தேவையில்லை என மிகவும் காட்டமாக விமர்சித்தார். சில தினங்களுக்கு முன்னர் எனக்குத் தொழில் ரொமான்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அந்த படத்தின் கதாநாயகன் அசோக் செல்வன் வரவில்லை. இது தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் திருமலை மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார்.

இதில் படத்தின் புரோமோசன் நிகழ்ச்சியில் நடிகர்கள் கலந்து கொண்டால், படத்தினை ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் கொண்டு செல்வது என்பது தயாரிப்பாளருக்கு பக்க பலமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரத்தில் ஒரு படம் மாபெரும் வெற்றியைப் பெற்றால், அந்த படத்தின் மூலம் மிகப்பெரிய பலனை அனுபவிப்பது அந்தப் படத்தின் கதாநாயகனும் கதாநாயகியும்தான். குறிப்பாக கதாநாயக மத்திய படங்களே எடுத்துப் பழகிய தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள்தான் அதிக பலனைப் பெறுகின்றனர்.
இளம் நடிகர்கள்: தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் கணிசமான பலன் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தயாரிப்பாளர் திருமலை, சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் தற்போது வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்கள் மற்றும் நாயகிகளை குறிவைத்து பேசுகின்றனர். ஆனால் இதே தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக வளர்ந்து நிற்கும் அஜித்குமார், நயன்தாரா உள்ளிட்டோர் படத்தில் நடிப்பதுடன் நிறுத்திக் கொள்கின்றனர். படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை.
அஜித், நயன்: நயன்தாரா, ஷாரூக்கானுடன் நடித்த ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றபோது கூட, கலந்து கொள்ளவில்லை. அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் தனது படத்தின் புரோமோஷனுக்காக செய்தியாளர்களைச் சந்தித்தார். ஆனால் இன்றைக்கு டாப் கதாநாயகர்களில் ஒருவராக மாறிவிட்டதால் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கோ அல்லது செய்தியாளர் சந்திப்புகளுக்கோ வருவதில்லை. வளர்ந்து வரும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் மீது தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் தயாரிப்பாளர்கள் ஏன், அஜித்குமார், நயன்தாரா உள்ளிட்ட வளர்ந்த நட்சத்திரங்களிடம் இந்த கேள்வியைக் கேட்பதே இல்லை.
தலையாட்டும் தயாரிப்பாளர்கள்: இன்னும் சொல்லப்போனால் அவர்கள் கூறும் விஷயங்களுக்கு பெரும்பாலான தயாரிப்பாளர்கள் மறுப்பே தெரிவிக்காமல் அவர்கள் தங்களது படத்தில் நடித்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்து, அனைத்திற்கும் தலையாட்ட ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகின்றது. இப்படி இருக்கையில், நடிகர்கள் தாங்கள் ஒப்புக்கொள்ளும் படங்களின் வெற்றி தோல்வி குறித்து எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகின்றனர் என்ற கேள்வி இயல்பாகவே எழுந்துவிடுகின்றனது. ஆனால் திரைக்குப் பின்னால் இவர்கள் தயாரிப்பாளருக்கு எந்த வகையில் கைகொடுக்கின்றனர் என்ற துணை கேள்வியும் எழுகின்றது.
ரஜினி, கமல், விஜய்: ஆனால் இன்றைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட உட்ச நட்சத்திரங்கள் தங்கள் படங்களின் புரோமோஷனில் கலந்து கொண்டு தயாரிப்பாளருக்கு பக்கபலமாக நிற்கின்றனர். இந்தியன் 2 படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை என்றாலும் கமல்ஹாசன் அந்த படத்தின் புரோமோசனுக்காக செலவு செய்த நாட்கள் எவ்வளவு? படம் சரியாகப் போகவில்லை என்ற காரணத்திற்காக கமல்ஹாசன் அடுத்த படத்தின் புரோமோசனில் கலந்து கொள்ளாமல் இருந்துவிடுவாரா? அவரிடமே இதைக் கேட்டால், இன்னும் அதிக புரோமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் எனக் கூறுவார். அதேபோல்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு படத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல தயாரிப்பாளர்களுக்கு பக்கபலமாக உள்ளனர்.
ஆரோக்யமான சூழல்? இன்றைக்கு வளர்ந்து வரும் நடிகர் நடிகைகள் இவர்களை தங்களின் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு அவர்களைப் போல் நடந்து கொள்ளவேண்டுமே தவிர, புரோமோசனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை, படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்ததும் பூசணிக்காய் உடைக்கப்படும்போதே படத்திற்கும் தனக்குமான உறவு முடிந்தது என நடந்து கொள்வது என்பது தமிழ் சினிமாவிற்குள் ஒரு ஆரோக்யமான சூழலை என்றைக்கும் ஏற்படுத்தாது. அதேபோல் தயாரிப்பாளர்களும் தனது படத்தில் நடிக்கும் வளர்ந்து வரும் நடிகர்கள் தொடங்கி உச்ச நட்சத்திரங்கள் வரை அனைவரையும் ஒரே மாதிரியாக அணுகாத வரை இந்த நிலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்பதையும் தயாரிப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நிம்மதி: அதாவது தயாரிப்பாளருக்கு பக்கபலமாக இருக்க மாட்டேன் எனக் கூறும் நடிகர் நடிகைகளை ஏன் உங்கள் படத்தில் ஒப்பந்தம் செய்ய வேண்டும்? அவர்களை வைத்துத்தான் படம் எடுக்கவேண்டும் என கடன் வாங்கி படத்தினை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு அப்படி என்ன நெருக்கடி வந்தது? படத்தின் முதல் நாளில் இருந்து படம் ரிலீஸ்க்கு வரும் வரை தயாரிப்பாளருக்கு பக்கபலமாக இருக்கும் நடிகர்களை வைத்து எந்த கதையைத் தயாரித்தால் படத்தினை மக்கள் ரசிப்பார்களோ அப்படியான படத்தினை தயாரித்து நிம்மதியாக இருப்பதை விட்டுவிட்டு, தலைவலியை வாங்கிக் கட்டிக்கொள்வது யார்? அதேபோல் நடிகர்களும் தயாரிப்பாளருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் எப்போதும் இருக்கவேண்டும்.


Click it and Unblock the Notifications











