மல்லுவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் 50% சம்பளத்தை குறைக்க முடிவு... தயாரிப்பாளர்கள் அதிரடி!
சென்னை: தமிழ் சினிமாவிலும் நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
இதனால் சினிமா தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

50 சதவீதம் குறைப்பு
அதன்படி படங்களின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமா நடிகர் நடிகைகளின் சம்பளத்தை 50 சதவீதம் குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

வீடியோ கான்ஃபிரன்ஸ்
இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டம் நேற்று மாலை வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் நடைப்பெற்றது. அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, கலைப்புலி தாணு, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

குறைக்க முடிவு
இதில் நடிகர்கள், நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருடைய சம்பளத்திலும் 50% வரை குறைப்பது என முடிவெடுக்கப்பட்டது. சம்பளம் அதிகம் வாங்கும் நடிகர்களின் சம்பளத்தில் அதிகப்படியான சதவீதத்தையும், குறைவான சம்பளம் வாங்கும் நடிகர்களின் சம்பளத்தில் குறைவான சதவீதத்தையும் குறைக்கலாம் என தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

மலையாளத்தை தொடர்ந்து..
இந்தச் சம்பளக் குறைப்பு முடிவு குறித்து நடிகர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம் என அனைத்துச் சங்கங்களிலும் பேசி முடிவெடுக்கலாம் என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தெலுங்கு மற்றும் மலையாள சினிமா நடிகர் நடிகைகளுக்கான சம்பளத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











