பிலிம் நியூஸ் ஆனந்தன்... தெரிந்ததும் தெரியாததும்...!
சென்னை: தொடக்கம் என்று ஒன்று இல்லாமல் நடப்பு நிகழ்வுகளும் இல்லை, முடிவும் இல்லை. வாழ்க்கை, சினிமா, அரசியல், தலைவர்கள் என ஒவ்வொரு துறைக்கும் முன்னோடி என்று ஒருவர் இருப்பார்.
அப்படிப்பட்ட முன்னோடிகளில் ஒருவர்தான் பிலிம் நியூஸ் ஆனந்தன். அவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
தமிழ் சினிமாவின் முதல் பிஆர்ஓ, அதாவாது, தமிழ் திரைப்படத் துறையின் முதல் செய்தித் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன்தான். சிறு வயதிலேயே நாடகங்கள் நடிப்பது, கதை, வசனம் எழுதுவது மற்றும் புகைப்படம் எடுப்பது என பல் திறமையாளராக விளங்கியவர் ஆனந்தன்.

பெயர் காரணம் :
இவர் ஒளிப்பதிவாளர் சி ஜே மோகனிடம் ஒளிப்பதிவினை கற்றுக்கொண்டார். 1954-ம் ஆண்டு பிலிம் சேம்பர் பத்திரிகைக்காக படப்பிடிப்பு தளங்களில் நடக்கும் நிகழ்வுகளை பற்றி செய்தி சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்டார். அப்போது தனது கேமிராவில் கலைஞர்களை படமெடுக்க ஆரம்பித்தார். அந்த படங்கள் அவரது கல்லூரி தோழர் சி டி தேவராஜன் நடத்திய பிலிம் நியூஸ் பத்திரிகையில் வெளிவந்தது. அன்றிலிருந்தே இவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் என்று அழைக்கப்பட்டார்.

வேலை அமைவது எளிது
தனக்கான ஒரு வேலை அமைவது எளிது என்றாலும், அந்த வேலையில் தனக்கென ஒரு இடத்தினை பிடிப்பது மிகவும் கடினமான பணி ஆகும். இவர் எடுத்த புகைப்படங்கள் மற்றும் இவருக்கு புகைப்படத்தில் இருக்கும் ஆர்வத்தினால், நடிகன் குரல் என்ற பத்திரிகையில், புகைப்பட பத்திரிகையாளராக பணியாற்றினார். அப்பத்திரிகையின் ஆசிரியர் வித்வான் வே லட்சுமணன்.

எம்.ஜி.ஆருடன் சந்திப்பு
நடிகன் குரல் பத்திரிகையின் பதிப்பாளர் மற்றும் சினிமா துறை செய்திகளுக்கு சம்பந்தப்பட்டவர் என்ற முறையில், இவர் எம் ஜி ஆரை தினமும் சந்திப்பார். இவரது சந்திப்பு ஆனந்தனுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. ஏனென்றால், லட்சுமணனுடன் ஆனந்தனும் தினமும் படபிடிப்பு தளங்களுக்கும், நடிகர்களை சந்திக்கவும் செல்வார்.

நாடோடி மன்னனின் பிஆர்ஓ
1958 நாடோடி மன்னன் திரைப்படம் தான் பிலிம் நியூஸ் ஆனந்தன் திரையுலகில் முதல் பி ஆர் ஓ -வாக மாற்றியது. நாடோடி மன்னன் தயாரிப்பு நடந்துகொண்டிருக்கும் பொழுது, அந்நிறுவனத்திற்கு ஆனந்தன் சென்றார். அங்கு அத்திரைப்படம் தொடர்பான பல புகைப்படங்களை கண்டு, பத்திரிகை துறையில் தனக்கு பல நண்பர்கள் உள்ளனர், அவர்கள் மூலமாக நான் இந்த புகைப்படங்களை பத்திரிகைகளுக்கு குடுக்கலாமா என்று கேட்டு, அப்புகைப்படங்களை பெற்றுக்கொண்டு, மறுவாரம், அந்தப் புகைப்படங்கள் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டிருந்தது. அதனை கண்ட எம் ஜி ஆர் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆனந்தன் அவர்களை பாராட்டினார். அந்த நிகழ்வே ஆனந்தன் பி ஆர் ஓ-வாக மாற வழிவகுத்தது.

ஸ்டார் வாய்ஸ்
ஆனந்தன், பிலிம் நியூஸ் பத்திரிகை நிருபர் மற்றும் புகைப்பட கலைஞராகவும், ஸ்டார் வாய்ஸ் என்ற வார இதழ் பத்திரிகை ஆசிரியராகவும், பிலிம் நியூஸ் மாத இதழ் பத்திரிகை ஆசிரியராகவும், இறுதியில் பிலிம் சேம்பர் என்ற பத்திரிகையில் நேற்று வரை பணிபுரிந்தும் உள்ளார்.

பெருமைகள்
இவர் கிட்டத்தட்ட ஒன்பது புத்தகங்கள் வரை எழுதியுள்ளார். கலைமாமணி, கலைச் செல்வம், திரைத்துறை அகராதி, நடமாடும் பல்கலைக்கழகம், 1997- ம் ஆண்டின் சிறந்த மனிதர், கலா பீடம், செய்தி சிகரம், கலை மூதறிஞர், கௌரவ இயக்குனர், நடமாடும் திரையுலகக் கலைக்களஞ்சியம், சினிமா செய்தி தந்தை மற்றும் திரையுலக உ.வே.சா என 12 பட்டங்களை பெற்றுள்ளார்.

கணக்கே இல்லாத விருதுகள்
இத்துடன் மட்டும் முடியாமல், இவர் வாங்கிய சாதனையாளர் விருதுகள், விருதுகள், பத்திரிக்கையாளர் விருதுகள் மற்றும் தொலைக்காட்சி விருதுகள் என இவர் வாங்கிய விருதுகளை கணக்கிட்டுக்கொண்டே போகலாம்..

சினிமா செய்திகளின் மூல வேர்
எந்த ஒரு செயலும் துறையும் முடிவுக்கு வரும் வரை அதன் தொடக்கத்தினையும், அதனை தொடக்கியவரையும் யாரலும் மறக்க முடியாது. அந்த வகையில் இன்று நாம் அன்றாடம் பார்க்கும் கேட்கும் சினிமா செய்திகளை இன்று நமக்கு தருபவர்களுக்கு வித்திட்டவர் பி ஆர் ஓ ஆனந்தன். சினிமா செய்தியின் மூலவேர் இன்று காலை சரிந்தது... பல்வேறு கிளைகளை நட்டு விட்டு!


Click it and Unblock the Notifications











