பாகுபலி ரீ ரிலீஸிலும் அடி வாங்கும் டியூட் தமிழ் சினிமா.. நிலைமை எப்போதுதான் மாறுமோ?.. என்ன ஆச்சு?
சென்னை: தென்னிந்திய சினிமா திரைத்துறையில் கோலிவுட்டுக்கென்று தனியிடம் உண்டு. இங்கிருந்து ஏராளமான சினிமாக்கள் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக்காகியிருக்கின்றன. சொல்லப்போனால் இப்போது அந்த திரைத்துறைகளில் ஜொலித்துக்கொண்டிருக்கும் பல நடிகர்களுக்கு ஹிட்டுகளை கொடுத்திருக்கின்றன. ஆனால் இப்போதோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
பான் இந்தியா சினிமாக்கள் வருவது இப்போது அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றன. யார் படம் எடுத்தாலும் இந்திய அளவில் ஹிட்டாக்க வேண்டும், பாக்ஸ் ஆஃபிஸை ரூல் செய்ய வேண்டும் என்றுதான் ஆசை இருக்கிறது. அந்த ஆசையை தெலுங்கு, கன்னடம், மலையாளம் திரைத்துறையிலிருந்து வெளியாகும் படங்கள் தீர்த்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டன. பாகுபலி, கேஜிஎஃப், காந்தாரா, புஷ்பா, மஞ்சும்மல் பாய்ஸ், லோகா ஆகியவை சிறந்த உதாரணங்கள்.
தமிழ் சினிமாவின் நிலைமை?: ஆனால் தமிழிலிருந்து வரும் சினிமாக்களின் நிலைமையோ தலைகீழாக இருக்கிறது. வெளியூரில் பந்தயம் அடிப்பதைவிட உள்ளூரிலேயே அவை திணறிக்கொண்டிருப்பதுதான் கவலைக்குரிய ஒன்று. இவை அனைத்துக்குமே காரணம் இங்கிருக்கும் இயக்குநர்கள் கதையிலும், திரைக்கதையிலும் சுத்தமாக கவனம் செலுத்தாமல் பான் இந்தியா நடிகர்களை களமிறக்கினால் அது பான் இந்தியா படமாக மாறிவிடும் என்று நினைப்பதும், கொட்டப்படும் பட்ஜெட்டுக்கு நேர்மையாக உழைக்காததும்தான் என பலரால் சொல்லப்படுகிறது.

மாஸ் காட்டும் பாகுபலி: பாகுபலி படத்தின் முதல் பாகம் பத்து வருடங்களுக்கு முன்பு வெளியானது. அது வெளியாகி இரண்டு வருடங்கள் கழித்து அதன் இரண்டாவது பாகம் ரிலீஸானது. இரண்டு படங்களும் சேர்த்து 1500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. தற்போதுகூட இரண்டு பாகங்களையும் இணைத்து பாகுபலி தி எபிக் என்ற பெயரில் ரீ ரிலீஸ் செய்திருக்கிறார்கள். அதுவும் இரண்டே நாட்களில் இந்தியாவில் 20 கோடி ரூபாய்வரை அள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கையில் எடுத்த சூர்யா: பான் இந்தியா ஹிட்டுகளுக்கு ஆக்ஷன் ஜானரும், ஃபேண்டஸி ஜானரும்தான் உதவும் என்பதை பாகுபலி, கேஜிஎஃப், சமீபத்தில் வெளியான காந்தாராவை உணர்த்தியிருக்கின்றன. தமிழில் சூர்யா அந்த ஜானரை கங்குவா படத்தில் கையில் எடுத்தார். ஆனால் அந்தப் படத்தில் பட்ஜெட்தான் கொட்டப்பட்டதே தவிர்த்து மேக்கிங்கில் கவனத்தை கொட்டவில்லை. விளைவு பெரிய படுதோல்வியை மட்டுமின்றி கடுமையான ட்ரோலையும் சந்தித்தது.
அந்த ஜானர்தான் அப்படி என்றால் ஆக்ஷன் ஜானர் நிலைமை அதைவிட மோசம். ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி ரிசல்ட் அனைவரும் அறிந்ததுதான். அவர் அந்தப் படத்தில் ஸ்டார் நடிகர்களை களமிறக்கி ஜிகினா வேலைகள் காண்பிப்பதில் செலுத்திய கவனம் அளவுக்கு கதை, திரைக்கதையில் துளிகூட செலுத்தவில்லை என்பதுதான் எதார்த்த உண்மை. கூலி மட்டுமின்றி தக் லைஃப், குட் பேட் அக்லி, GOAT என மற்ற பெரிய ஹீரோக்களின் படங்களும் அதே நிலையில்தான் இருக்கின்றன.
அடுத்த தலைமுறை கோலிவுட்: கோலிவுட் அடுத்த தலைமுறை நடிகர்களிடம் சென்றுவிட்டது என்பதை இந்த தீபாவளி பலமாகவே உணர்த்தியது. தீபாவளி ரேஸில் கமர்ஷியல் ரீதியாக டியூட் பெரிய வரவேற்பை பெற்றாலும்; மலையாளத்தில் அடுத்த தலைமுறை படைப்பாளர்கள் எடுத்த மஞ்சும்மல் பாய்ஸ், தெலுங்கில் எடுத்த பிரேமலு அளவுக்கு மற்ற மொழிகளில் கொண்டாடப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதற்கு ஒரே வழி கதை, திரைக்கதை, டெக்னிக்கல் என அத்தனை ஏரியாக்களிலும் கோலிவுட் இன்னும் பலமாக வேண்டும் என்பதுதான். நல்ல படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவற்றை பெறிய பட்ஜெட் படங்கள் தின்றுவிடுகின்றன என்பது எதார்த்தம்.
இது ஒருபக்கம் இருக்க பாகுபலி ரீ ரிலீஸாகி இரண்டு நாட்களில் வசூலில் சக்கைப்போடு போடுகிறது. தமிழில் நேற்று ஆர்யன், ஆண் பாவம் பொல்லாதது என இரண்டு படங்கள் ரிலீஸாகின. இரண்டு படங்களின் வசூலை சேர்த்தாலும் பாகுபலி வசூலை தொட முடியவில்லை என்பது கவலைக்குரிய ஒன்றாகத்தான் திரைத்துறையினரால் பார்க்கப்படுகிறது. நம் டியூடான தமிழ் சினிமாவை மற்ற மொழி சினிமாக்களோடு போட்டி போடும் அளவுக்கு வளர்ப்பது இயக்குநர்கள் கைகளில்தான் இருக்கிறது. அதுதான் அவசரமான அவசியம். செய்வார்களா இயக்குநர்கள்?


Click it and Unblock the Notifications











