Actor Rajesh: ராஜேஷ் குறித்து தெரியாத தகவல்கள்.. சினிமா - அரசியல் - ஜோதிடத்தில் கலக்கியது எப்படி?
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர் ராஜேஷின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவர் இன்று அதாவது மே மாதம் 29ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது, 75. நடிகர் ராஜேஷின் மறைவுச் செய்தி கேட்டு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவர் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
ராஜேஷ் அடிப்படையில் பள்ளி ஆசிரியர். பள்ளி ஆசிரியராக இருந்தாலும் அவருக்கு சினிமாவின் மீது ஆர்வம் இருந்தது. இதனால் அவர் சினிமாவில் நடிக்கவும் முயற்சி செய்து வந்தார். இயக்குநர் இமயம் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அவள் ஒரு தொடர்கதை படத்தில் துணை நடிகராக நடித்தார். அதன் பின்னர் 1979 ஆம் ஆண்டு வெளியான கன்னிப்பருவத்திலே என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் கே. பாலச்சந்தரின் அச்சமில்லை அச்சமில்லை படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
சினிமா வாழ்க்கை: ராஜேஷ் ஆரம்பத்தில் இருந்தே நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததால், கதாநாயகன், துணை நடிகர், குணச்சித்திர கதாபாத்திரம் என எல்லாவற்றிலும் நடித்து வந்தார். இதுவரை சுமார் 160 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் மெர்ரி கிறிஸ்துமஸ். அவர் நடித்துக் கொண்டிருக்கும்போதே, கடந்த 1985 ஆம் ஆண்டு சென்னையில் படப்பிடிப்புக்கு என தனி வீட்டைக் கட்டியவர். இந்த வீட்டை அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் திறந்து வைத்தார். இந்த வீட்டில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்கள் படமாக்கப்பட்டன.

அரசியல் - ஜோதிடம்: ராஜேஷ் திராவிடக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர் என்றாலும் எம்.ஜி.ஆர்க்கு ஆதரவாக செயல்பட்டவர். அதேபோல் அவரது மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதாவா? அல்லது ஜானகியா என்று இருந்தபோது ஜானகிக்காக பிரச்சாரம் செய்தவர். அதன் பின்னர் ஜோதிடத்தில் ஆர்வம் வந்ததால் ஜோதிடத்தில் தீவிரமாக இறங்கினார். அதேபோல் ரியல் எஸ்டேட் தொழிலிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டார். ரியல் எஸ்டேட் தொழிலில் தீவிரமாக ஈடுபட்ட போது படப்பிடிப்புக்காக அவர் கட்டிய வீட்டை விற்றார். ராஜேஷ் கடந்த 1983 ஆம் ஆண்டு ஜான் சிவிலியா வனத்திராயரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு திவ்யா மற்றும் தீபக் என ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள்.
சின்னத்திரை: சினிமாவில் நடிகராக மட்டும் இல்லாமல் டப்பிங் கலைஞராகவும் ராஜேஷ் பணியாற்றியுள்ளார். வெள்ளித்திரை மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் பணியாற்றியுள்ளார். ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கார்த்திகை தீபம் தொடரில் ராஜேஷ் தீபாவின் தந்தையாகவும் நாதஸ்வரக் கலைஞராகவும் நடித்திருந்தார். சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர்மனாகவும் பணியாற்றியுள்ளார். அவரது மறைவு திரைத்துறையில் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











