ஒருவரின் துயர் காசாகத்தான் வேண்டுமா? ஊடகங்கள் இப்படி செய்யலாமா? கண்டித்த தயாரிப்பாளர் சங்கம்!
சென்னை: பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் காலமானார். அவருக்கு கடந்த வாரம் இதய அறுவை சிகிச்சை நடந்த நிலையில், வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவர் திடீரென உயிரிழந்தார். இவரது மறைவு ஒட்டு மொத்த திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. மனோஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், முன்னணி நடிகர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை அனைவரும் வந்திருந்தனர். அவர்களை படம் எடுக்க மீடியாக்கள் முண்டி அடித்துக்கொண்டதை தயாரிப்பாளர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.
அகால மரணம் அடைந்த பாரதிராஜாவின் உடல், பாரதிராஜாவின் நீலாங்கரை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில், கவுண்டமணி, செந்தில், விஜய், சூர்யா,கார்த்திக், மணிரத்னம், பாக்கியராஜ், பேரரசு, சினேகன்,விக்ரமன், சுஹாசினி, அதிதி சங்கர், முதல்வர் முக ஸ்டாலின், சீமான், பிரேமலதா விஜயகாந்த், என பலர் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். பின் நான்கு மணி அளவில் வீட்டில் சில இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, பின் வேன் மூலம் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. மனோஜ் வீட்டுக்கு ஆறுதல் சொல்ல வந்த பல பிரபலங்களை ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் முட்டி மோதிக்கொண்டு படம் எடுத்தனர்.

மரணம் எல்லோருக்கும் நிகழக்கூடியது: இதை, திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க செயல் தலைவர் டி.ஜி.தியாகராஜன் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, மரணம் என்பது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று. அது இயற்கையின் தீர்மானத்திற்குட்பட்டது என்பதை இவ்வுலகில் பிறந்த அனைத்து உயிர்களும் அறியும். ஆறறிவு கொண்ட மனிதன் இன்னும் சற்றே அதிகமாகவே அதை உணர்ந்தவன். மரண வீடுகள் மௌனிக்கப்படவும், துயரத்தைப் பகிர்ந்துகொள்ளவும், துயர் கொள்ளவும் வேண்டியவை.
காசாக்க வேண்டுமா: யாரோ இறந்துபோனார், எனக்கும் அவருக்கும் என்ன? ஒருவரின் அழுகையோ, துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தையோ ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேண்டும்? ஒருவரின் துயர் நமக்கு காசாகத்தான் வேண்டுமா? பார்வையாளர்களைக் கொண்டு வரும் என்ற எண்ணம் எத்தனை இரக்கமற்றது? கொடியது?! நாம் மற்றொருவரின் மரணத்தையோ, இயலாமையையோ கொண்டாடும் மனநிலைக்கு வந்துவிட்டோமே என்ற கவலை வலுக்கிறது. ஊடகங்கள் கார்களின் உள்ளேயும், நடுவீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடலையும் ஏன் படம் பிடிக்க வேண்டும்?

என்ன பேரானந்தம்: அதுவும் முண்டியடித்துக்கொண்டு துக்க முகங்களைக் காட்டுவதில் அப்படி என்ன பேரானந்தம் கிடைத்துவிடப் போகிறது? இனி வரும் காலங்களில் ஊடக அனுமதி இறப்பு வீடுகளில் கூடவே கூடாது என்பதை முன்னெடுக்க வேண்டும். அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும், பத்திரிகை தொடர்பாளர் யூனியனும் இணைந்து இதற்கு ஒரு நல்ல தீர்வைக் காண்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சக மனிதர்களின் இழப்பை நம் வீட்டு இழப்பாகக்கருதி துயர் விசாரிக்க வரட்டும். கையில் கேமரா இல்லாமல். இனிவரும் காலங்களில் இச்செயல் முற்றிலும் தவிர்க்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஊடகங்களுக்கு முன், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இந்த வேண்டுகோளை வைக்கிறது என தயாரிப்பாளர் சங்க செயல் தலைவர் டி.ஜி.தியாகராஜன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications