கொரோனா லாக்டவுனால் தவிப்பு.. தமிழ் சினிமாவுக்கு ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம்.. ஆர்.கே.செல்வமணி தகவல்!
சென்னை: கொரோனாவால் தமிழ் சினிமாவுக்கு இதுவரை ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
இந்தத் தொற்று காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே செல்கிறது.

தீவிர நடவடிக்கை
இதைக் கட்டுப்படுத்த அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருந்தும் முடியவில்லை. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.53 கோடியாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8.50 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.77 கோடியாக இருக்கிறது.

சினிமா துறை
கொரோனா ஊரடங்கினால் திரையுலகம் முடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் கடந்த 5 மாதமாக நடைபெறவில்லை. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. சினிமா தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சினிமா துறைக்கு ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

வருமான இழப்பு
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் காரணமாக திரையுலகம் 6 மாதங்களாக முடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. தியேட்டர்கள் இயங்கவில்லை. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பட்டினியால் அவதிப்படுகிறார்கள். திரையுலகம் முடங்கியதால் சினிமா துறையினருக்கு மொத்தமாக வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

2 ஆயிரம் கோடி நஷ்டம்
தொழிலாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் ஆகியோருக்கு சம்பளம் இழப்பும் தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் சினிமா துறைக்கு மொத்தம் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர் சூர்யா, ரூ.80 லட்சம் வழங்கி இருக்கிறார். அதை இன்று முதல் 20 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.400 வீதம் வழங்க இருக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











