இணைய தளங்களா.. வேண்டவே வேண்டாம்.. தடை போடும் தமிழ்ப் பட தயாரிப்பாளர்கள்!!
இனி தமிழ் சினிமா நிகழ்ச்சிகளுக்கு இணையதளப் பத்திரிகையாளர்களை அழைக்கவே கூடாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.
இன்றைக்கு தமிழ் சினிமா மட்டுமல்ல, உலகின் அத்தனை மொழிப் படங்களுக்கும் செய்திகள், விளம்பரம், வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் இணைய தளங்கள்தான் முதல் வாயிலாக உள்ளன.
சினிமா தொடர்பான செய்திகளை இணையதளங்கள் மூலமே வெளிநாட்டு ரசிகர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில், தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை, இணையதள பத்திரிகையாளர்களை இனி எந்த சினிமா நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கவே கூடாது என கூறுவதும், பின்னர் சத்தமின்றி அழைப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டு மீண்டும் இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது.
இன்று திடீரென தமிழ் சினிமா பிஆர்ஓக்களை அழைத்த தயாரிப்பாளர் சங்கம், இனி எந்த இணைய தளப் பத்திரிகையாளர்களையும் சினிமா நிகழ்ச்சிகளுக்கு அழைக்கக் கூடாது. தேர்ந்தெடுத்த 45 அச்சுப் பத்திரிகையாளர்களை அழைத்தால் மட்டும் போதும் என்று வாய்மொழியாக உத்தரவிட்டு, அந்த 45 இதழ்களின் பெயர்களையும் குறித்துக் கொடுத்துள்ளனர்.
அச்சுப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு இணையான அந்தஸ்தை இணையதள பத்திரிகைகளுக்கும் வழங்கும் சட்டத்தை 8 ஆண்டுகளுக்கு முன்பே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது அன்றைய மன்மோகன் சிங் அரசு. இப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் போட்டுள்ள இந்தத் தடை பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது மட்டுமல்ல, பிரஸ் கவுன்சில் விதிகளின் படி குற்றமும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொன்று, இந்தியாவில் எந்த மொழி சினிமாவிலும் இதுபோன்ற தடை என்பதே கேள்விப்படாத ஒன்று. சர்வதேச அளவில் சினிமா என்பது இப்போது இணைய தளங்களைச் சார்ந்தே உள்ளது.


Click it and Unblock the Notifications











