தயாரிப்பாளர்கள்-சினிமா தொழிலாளர்கள் சண்டை: நாளை ஸ்டிரைக்!
திரைப்படத் தொழிலாளர்கள் சங்கமான பெப்சி நிர்ணயித்துள்ள சம்பளத்தைத் தர முடியாது என்று கூறியுள்ள தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், இதை வலியுறுத்தும் வகையில் நாளை ஒரு நாள் படப்பிடிப்புகளை நிறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. மேலும் தனது பொதுக்குழுவையும் அது நாளை கூட்டி பேசவுள்ளது.
இதுகுறித்து, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தயாரிப்பாளர்கள் சங்கமும், பெப்சியும் (திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்) கலந்து பேசி தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய விகிதங்களையும், பொதுவிதிகளையும் முடிவு செய்வது வழக்கம்.
எங்களது புதிய நிர்வாகம் பதவியேற்ற பின்பு நடத்தப்பட்ட, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய ஊதிய விகிதம் குறித்து பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில், பெப்சி நிர்வாகிகள் தாங்களாகவே முறையற்ற புதிய சம்பள விகிதத்தை நிர்ணயம் செய்து கொண்டதோடு, இனி இந்த சம்பளத் தைப் பெற்றுக் கொண்டுதான் தொழிலாளர்கள் வேலை செய்வார்கள் என்று தன்னிச்சையாக அறிவித்துள்ளனர். இது, தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர்களின் ஜனநாயகப் போக்குக்கு சவால் விடுவது போல, பெப்சியின் தன்னிச்சையான செயல் பாடு அமைந்துள்ளது. ஆகவே, பெப்சியின் இந்த முடிவு குறித்து தயாரிப்பாளர்களோடு கலந்து பேசவும், தொழிலாளர்களுக்கு எந்த விகிதத்தில் சம்பள உயர்வுக் கொடுத்து படப்பிடிப்பை தொடர்வது என்று முடிவெடுக்கவும்,தயாரிப்பாளர்களின் அவசர பொதுக்குழு கூட்டம் நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு பிலிம் சேம்பர் திரையரங்கில் நடைபெற இருக்கிறது.
இது, எல்லா தயாரிப்பாளர்களும் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய முக்கியமான கூட்டம் என்பதால், நாளை முழு நாளும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. அன்று எந்த தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பும் நடைபெறாது.
ஆகவே, தயாரிப்பாளர்களின் ஒற்றுமை காக்க, அனைத்து தயாரிப்பாளர்களும் இந்த முக்கிய கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் கூறியுள்ளனர்.
முன்பு ஒருமுறை இப்படித்தான் பெப்சி அமைப்பினர் பெரும் போராட்டத்தில் இறங்கி தமிழ்த் திரையுலகமே ஸ்தம்பித்துக் கிடந்தது. தற்போது தயாரிப்பாளர்கள் பெப்சியுடன் மோதலைத் தொடங்கியுள்ளனர். இது எங்கே போய் முடியுமோ என்று சினிமாக்காரர்கள் மத்தியில் கவலை நிலவுகிறது.


Click it and Unblock the Notifications











