திரைப்பட விழாக்களில் விருதுகள்...சர்வதேச கவனத்தை கவரும் தமிழ் படங்கள்...ஓர் சிறப்பு பார்வை
சென்னை : சமீப காலமாக தமிழ் திரைப்படங்கள், சர்வதேச திரைப்பட திருவிழாக்களில் திரையிடப்படுவதும், விருது பெறுவதும் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த 10 ஆண்டுகளில் பல தமிழ் படங்கள், சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.
சில திரைப்படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுவதற்கு பதிலாக நேரடியாக திரைப்பட திருவிழாக்களில் திரையிடப்பட்டுள்ளன. இவைகள் சர்வதேச அளவிலான விருதுகளுடன், தேசிய விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டு, பலராலும் பாராட்டப்பட்டுள்ளன.
இருந்த போதிலும் இப்படங்கள் தியேட்டர்களில் தோல்விப்படங்களாகவே பார்க்கப்படுகின்றன. விருது பெறும் அளவிற்கு தகுதியான படங்களை ரசிகர்கள் ஏன் விரும்புவதில்லை என்பது இன்றளவும் புரியாத புதிராகவே இருந்து வருகின்றன. சர்வதேச விருதுகளை பெற்ற சில படங்களை இங்கே காண்போம்.

கூழாங்கல் (2021)
வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் படம், குடிகார தந்தை - மகன் பற்றிய கதை. இதில் கருத்தப்பாண்டியன், செல்ல பாண்டி ஆகிய புது முகங்கள் நடித்துள்ளனர். நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரித்த இந்த படம் தான், 50 வது ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட திருவிழாவில் டைகர் விருது பெற்ற முதல் தமிழ் படம்.

நசிர் (2020)
புதுமுக இயக்குனரான அருண் கார்த்திக் இயக்கிய படம் நசிர். கோவையில் வாழும் ஒரு சராசரி இஸ்லாமியரின் வாழ்க்கையை சொல்லும் படம். ரோட்டர்டம் திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்ட இப்படம் சிறந்த ஆசிய படத்திற்கான NETPAC விருதினை பெற்றது. ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட திருவிழாவிலும் வரவேற்பை பெற்றது.

கேடி என்ற கருப்பு துரை (2019)
வயதான மனிதர் ஒருவருக்கு தெருவில் இருக்கும் ஆதரவற்ற சிறுவனுடன் ஏற்படும் பிணைப்பை சிரிப்பு, சோகம், அன்பு, பயம், கோபம் ஆகியவற்றை கலந்து சொல்லும் படம் கேடி. இப்படம் சிங்கப்பூர் தெற்காசிய திரைப்பட திருவிழாவில் ஜூரி விருதினை பெற்றது. ஐரோப்பியாவில் நடந்த ஆசிய திரைப்பட விழாவில் இப்படத்திற்காக சிறந்த இயக்குனர் விருதினை மதுமிதா பெற்றார். ஆசிய அமெரிக்க சர்வதேச திரபை்பட விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை நாகவிஷால் பெற்றது. ஐரோப்பிய ஆசிய திரைப்பட விழா உள்ளிட்ட சர்வதேச விழாக்கள் பலவற்றிலும் இப்படம் திரையிடப்பட்டது.

விசாரணை (2016)
அதிகார துஷ்பிரயோகத்தை மிக கடினமாக, நெஞ்சை பதவைக்கும் சம்பவங்களை வைத்து சொல்லிய படம் விசாரணை. வெற்றிமாறன் இயக்கிய இந்த படம் தான், திரையுலகினர் கவுரவமாக கருதும் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம். இந்த படம், சிறந்த படத்திற்கான ஒரிசோன்டி விருது மற்றும் அம்னஸ்டி சர்வதேச இத்தாலியா விருது ஆகிய 2 விருதுகளை வென்றது.

ரேடியோபெட்டி (2015)
கேட்கும் திறன் குறைந்த ஒரு முதியவருக்கும், பழங்கால ரேடியோவுக்கும் இடையேயான காதலை சொல்லும் படம். தனது அப்பா பரிசாக கொடுத்த ரேடியோவை பாதுகாக்கும் முதியவரை மையமாக கொண்ட இந்த படத்தை ஹரி விஸ்வநாத் இயக்கி இருந்தார். ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்ட முதல் தமிழ் படம் இது தான். இது புசன் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் விருதினை பெற்றது.

காக்கா முட்டை (2014)
பிசா சுவைக்க வேண்டும் என்பதற்காக இரண்டு சிறுவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை. மணிகண்டன் இயக்கிய இப்படம் டெரண்டோ சர்வதேச திரைப்பட விழா, ரோம் திரைப்பட விழா, துபாய் சர்வதேச திரைப்பட விழா, பிரிஸ்பென் ஆசிய பசிபிக் திரைப்பட விழா, கோல்ட் கோஸ்ட் திரபை்பட விழா ஆகியவற்றில் திரையிடப்பட்டது. தைபை கோல்டன் ஹார்ஸ் திரைப்பட விழாவில் NETPAC விருதினை பெற்றது.


Click it and Unblock the Notifications











