5 மணிக்கு எழுந்து 6 மணிக்கு ஓடிவிட்டார் விஜய்.. இந்தியாவிலேயே ஃபர்ஸ்ட்.. ஆதவ் பெருமிதம்
சென்னை: சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு நாளையொட்டி, 'ஸ்டார்ட் ரன்.. ஸ்டாப் ட்ரக்ஸ்' என்ற பெயரில் மாரத்தான் போட்டியை முதலமைச்சர் இன்று விஜய் தொடங்கிவைத்தார். தொடங்கி வைத்ததோடு மட்டுமின்றி அவர்களுடன் ஓடவும் செய்தார். இந்த மாரத்தானில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், மரிய வில்சன், வெங்கட ரமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
'போதை பொருள் ஆட்டுவிக்கும் சமூகம் தள்ளாடி வீழ்ந்துவிடும்' என்ற கூற்றுக்கு செயல்வடிவத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது தமிழ்நாடு. அதனை ஒழிப்பதற்கு கடந்த திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதிய பலனை அளிக்கவில்லை. இப்போது அமைந்திருக்கும் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசும் போதை பொருள் புழக்கத்தை தடுப்பதற்கான முன்னெடுப்புகளில் இறங்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட போதை பொருள் தடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மாரத்தான் ஓட்டம்: சூழல் இப்படி இருக்க இன்று சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு நாள் ஆகும். அதனையொட்டி, 'ஸ்டார்ட் ரன்.. ஸ்டாப் ட்ரக்ஸ்' என்ற பெயரில் மாரத்தான் போட்டியை முதலமைச்சர் விஜய் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். அந்த மாரத்தான் தொடங்குவதற்கு முன்பு, போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழியையும் விஜய் உள்ளிட்டோர் எடுத்துக்கொண்டார்கள். அந்த சமயத்தில், 'ஸ்போர்ட்ஸ எடு ட்ரக்ஸ விடு' என்ற வாசகத்தையும் அங்கே வைக்கப்பட்டிருந்த பலகையில் எழுதி கையெழுத்திட்டார்.
மூன்று கிமீ ஓட்டம்: இவை அனைத்தையும் முடித்துக்கொண்டு விஜய்யும் மாரத்தான் ஓடினார். கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர்கள் அவர் மக்களுடன் ஓடினார். இடையே சில நிமிடங்கள் ஓய்வு எடுத்தபோது அருகே இருந்தவர்களிடம் ஜாலியாக சிரித்துக்கொண்டே பேசி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். தன்னுடன் ஓடி வந்த பெண்ணுக்கு தண்ணீர் பாட்டில் கொடுத்து உற்சாகப்படுத்தியதும் பலரையும் கவர்ந்தது.
ஸ்கோர் செய்யும் விஜய்: விஜய்யின் மாரத்தான் அவரது இமேஜுக்கு மேலும் பாசிட்டிவ் சிக்னலை கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த முதலமைச்சரும் இப்படி ஒரு செயலை செய்ததில்லை; எங்கள் தளபதி அனைத்து விஷயங்களிலும் ஸ்கோர் செய்கிறார் என்று தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் கொண்டாடி; அந்தப் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாக்கிவருகின்றனர். இதேபோக்கு விஜய்யிடம் தொடர்ந்து இருக்க வேண்டும் எனவும் பலர் சொல்கிறார்கள்.
ஆதவ் அர்ஜுனா அட்டாக்: இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "இந்தியாவிலேயே மூன்று கிலோமீட்டர் மாரத்தான் ஓடியது ஒரே முதலமைச்சர்தான். அவர் நம் முதலமைச்சர் விஜய்தான். வேறு யாரும் இப்படி செய்யவே இல்லை. ஓடியதே இல்லை. காலை 5 மணிக்கு எழுந்து; சரியாக ஆறு மணிக்கு வந்து 6.15 மணிக்கு ஓட ஆரம்பித்து மூன்று கிலோமீட்டர் நிறைவு செய்திருக்கிறார். நமது முதலமைச்சர் மாதிரியே தமிழ்நாடும் பலமாக போகிறது. இப்படி ஒரு யூத் முதலமைச்சர் இந்தியாவிலேயே கிடையாது" என்றார்.


Click it and Unblock the Notifications
