K. Balachander Memorial Square - சென்னையில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் நினைவு சதுக்கம்-தமிழ்நாடு அரசு முடிவ
சென்னை: K.Balachander Memorial Square(கே.பாலசந்தர் நினைவு சதுக்கம்) இயக்குநர் சிகரம் என புகழப்படும் கே.பாலசந்தருக்கு நினைவு சதுக்க அமைப்பதற்கு சென்னை மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்கியவர் கே.பாலசந்தர். தஞ்சை மாவட்டம் நன்னிலத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர் ஆரம்பத்தில் நாடகங்கள் போட்டவர். அவர் எழுதி, இயக்கிய நாடகங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. அதனையடுத்து சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்த அவர், நீர்க்குமிழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே பெரும் வெற்றி பெற்றது.

இரு துருவங்களை உருவாக்கியவர்: பல படங்களை இயக்கிய கே.பாலசந்தர்தான், இந்திய சினிமாவின் இரு துருவங்களாக தற்போது விளங்கிக்கொண்டிருக்கும் ரஜினிகாந்த்தையும், கமல் ஹாசனையும் சினிமாவில் நடிகர்களாக அறிமுகப்படுத்தினார். அதேபோல் ஏராளமான நடிகைகளையும் அறிமுகப்படுத்திய அவர் 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர். அவரது படங்களை இப்போது பார்த்தாலும் பல பாடங்களை சொல்லிக்கொடுக்கும் வல்லமை வாயந்தது.
பாலசந்தரின் பொய்: கே.பாலசந்தர் கடைசியாக பொய் என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் 2006ஆம் ஆண்டு வெளியானது. அதனையடுத்து குசேலன், ரெட்டைச்சுழி, நினைத்தது யாரோ, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்தார். இயக்கத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் தனது முத்திரையை அவர் 9 தேசிய விருதுகளையும், 12 பிலிம்பேர் விருதுகளையும், ஒரு தாதா சாகேப் பால்கே விருதையும் பெற்றிருக்கிறார். வயோதிகம் காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
நினைவு சதுக்கம்: இந்நிலையில் கே. பாலசந்தர் நினைவாக சென்னையில் நினைவு சதுக்கம் ஒன்று அமைக்க சென்னை மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இதில் 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது.

1000 சதுர அடியில்: அதில்தான் மறைந்த பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் நினைவாக மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் காவிரி மருத்துவமனை அருகில் ஆயிரம் சதுர அடி அளவில் உள்ள போக்குவரத்து இடத்திற்கு கே.பாலசந்தர் சதுக்கம் அல்லது கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, அவ்வை சண்முகம் சாலைக்கு வி.பி.ராமன் பெயரும் மந்தைவெளி மேற்கு வட்ட சாலைக்கு மறைந்த பிரபல பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் பெயரும் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











