பொங்கல் பணத்துக்கு வரிசைதான் ஃபுல் ஆகிடுச்சே.. பராசக்திக்கு எப்படி ஆகும்?.. கூட்டம் குறைய அதுதான் காரணமா?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியிருக்கும் பராசக்தி படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரிய எதிர்பார்ப்போடு வெளியான படத்துக்கு ரசிகர்கள் பெரும்பாலும் தங்களது பாசிட்டிவ் விமர்சனங்களையே கொடுத்தார்கள். இருந்தாலும் இரண்டு நாட்களில் தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் வெகுவாக குறைந்துவிட்டது என்று புலம்பல்களை கேட்க முடிகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி. இதில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அதர்வா, ஸ்ரீலீலா, பிருத்வி உள்ளிட்டோர் முக்கியமான ரோலினை ஏற்றிருக்கிறார்கள். ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் 60களில் நடந்த மாணவர்களின் போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவானது. இயக்குநர் தொட்ட கதைக்களம் சென்சேஷனலான ஒன்று என்பதால் எப்படிப்பட்ட படமாக இதனை கொடுக்கப்போகிறார் என பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆவலோடு இருந்தார்கள்.
வெளியான படம்: எதிர்பார்த்தபடியே ஏகப்பட்ட கட்டுகள், மியூட்டுகளை சென்சார் அதிகாரிகள் கொடுத்தார்கள். மொத்தம் 25 இடங்களில் படத்துக்கு விழுந்த அத்தனை வெட்டுகளையும் தாங்கிக்கொண்டு பத்தாம் தேதி படமானது வெளியானது. இருந்தாலும் முன்கூட்டியே எந்தெந்த வசனங்களுக்கெல்லாம் மியூட்டை போட்டார்கள் என்பது தெரிந்துவிட்டதால்; பெரிய அளவில் அதிருப்தியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தவில்லை. அதேசமயம் வெளிநாடுகளில் எல்லாம் அன் கட் வெர்ஷனாக படம் ரிலீஸானது.

சூப்பரான வரவேற்பு: படத்துக்கு ரசிகர்கள் தங்களது அமோக ஆதரவை முதல் நாளில் கொடுத்தார்கள். உணர்வுப்பூர்வமான படமாக பராசக்தி அமைந்துவிட்டதாக கொண்டாடினார்கள். குறிப்பாக சிவகார்த்திகேயன், ரவி மோகன் ஆகியோரின் நடிப்பு வேற லெவலில் இருந்ததாகவும்; நிச்சயம் இனிமேல் ரவிக்கு வில்லனாக நடிக்க சொல்லி ஏகப்பட்ட அழைப்புகள் வரும் என்றும் ஆரூடம் கூறியுள்ளார்கள் ரசிகர்கள். எஸ்கேவுக்கு 25ஆவது படமாக வெளியாகி இது ஹிட்டாகியும்விட்டது. எனவே 25ஆவது படத்தை வெற்றி படமாக கொடுத்த சில நடிகர்களில் ஒருவராகவும் மாறியிருக்கிறார் சிவா.
குறைந்த கூட்டம்: இதுவரை இரண்டு நாட்களில் மொத்தம் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக பட தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. ஆனாலும் கடந்த இரண்டு நாட்களைவிடவும் மூன்றாவது நாளான இன்று படத்துக்கு வந்த ரசிகர்கள் கூட்டம் வெகுவாக குறைந்துவிட்டதாகவும் ஒரு பேச்சு எழுந்திருக்கிறது. இதனால் படக்குழு கொஞ்சம் அப்செட்டாகிவிட்டதாகவும் நெருக்கமான வட்டாரம் கூறுகிறது.
என்ன காரணம்?: தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 3,000 ரூபாய் பணம், கரும்பு, புத்தாடை வழங்கப்படுகிறது. இங்கே ஒவ்வொருவரும் அதனை வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் க்யூவில் கால் கடுக்க நிற்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அந்த வரிசைக்குத்தான் கூட்டம் நிரம்பி வழிய ஆரம்பித்திருக்கிறது. அங்கே ஃபுல் ஆகும்போது பராசக்தி டிக்கெட் கவுன்ட்டர்கள் எப்படி முழுவதுமாக நிரம்பும். பொங்கல் பரிசு தொகுப்பு பராசக்தி வெற்றியில் இப்படி அநியாயமாக தீ வைத்துவிட்டதோ என்று கமெண்ட்ஸ்களை கலாய்த்து நெட்டிசன்கள் பறக்கவிடுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











