நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்கலாம்.. நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது தமிழக அரசு!
சென்னை: நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்க என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி முதல் சின்னத்திரை உட்பட அனைத்துப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இரண்டு மாதங்கள் ஆன நிலையில் படப்பிடிப்புகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.

அரசிடம் கோரிக்கை
இந்நிலையில் கடந்த வாரம் சினிமா தொடர்பான போஸ்ட் புரடெக்ஷன் பணிகளை தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்பை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என சின்னத்திரை தயாரிப்பாளர்கள் மற்றும் ஃபெஃப்சி தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நிபந்தனைகளுடன் அனுமதி
இந்நிலையில் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் மற்றும் ஃபெஃப்சி தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளுடன் படப்பிடிப்பை தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி சென்னையில் சுற்றுச்சுவர் உள்ள வீடுகள் அல்லது உள் அரங்குகளில் மட்டும் படப்பிடிப்புகளை நடத்தலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.

தடை செய்யப்பட்ட பகுதிகள்
மேலும் சென்னையில் படப்பிடிப்பு நடத்த மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும். பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்தும் போது அந்தந்த ஆட்சியர்களிடம் அனுமதி பெற வேண்டும். நகர்புறங்களில் பொதுவெளியில் படப்பிடிப்புகளை நடத்தக் கூடாது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது.

மாஸ்க் கட்டாயம்
ஊரகப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் படப்பிடிப்புகளை நடத்தலாம். நடிகர் நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் என 20 பேருக்கு மிகாமல் படப்பிடிப்புகளை நடத்த வேண்டும். படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர் நடிகைகளை தவிர மற்ற அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.
நாளை முதல்..
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கிறது. தமிழக அரசு அனுமதி வழங்கியிருப்பதால் தமிழகத்தில் நாளை முதல் சீரியல் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











