வன்முறை, பிறமொழிக் கலப்பு... தலைவா படத்துக்கு வரிவிலக்கு இல்லை - அரசு அறிவிப்பு
சென்னை: வன்முறை, பிறமொழிக் கலப்பு, பெண்கள் குழந்தைகளை பாதிக்கும் காட்சிகள்- வசனங்கள் அதிகம் உள்ளதால் தலைவா படம் வரி விலக்குப் பெறும் தகுதியை இழந்துவிட்டது. எனவே இந்தப் படத்துக்கு வரிவிலக்கு தர முடியாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
விஜய், அமலாபால் நடித்துள்ள 'தலைவா' திரைப்படம் தமிழகத்தில் மட்டும் வெளிவரவில்லை. எப்போது வெளியாகும் என்று சொல்ல முடியாத நிலை.
வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் படம் வெளியாகி, ரிசல்டும் தெரிந்துவிட்டது.

இதற்கிடையே, 'தலைவா' படத்துக்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்ததையடுத்து, கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக வரிவிலக்கு குழுவினருக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது.
கேளிக்கை வரிச்சலுகை பெற வேண்டுமானால் தமிழில் பெயர் வைத்திருக்க வேண்டும். இதுதவிர வேறுசில கூடுதல் தகுதி வரையறைகளும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், 'தலைவா' திரைப்படத்தை பார்வையிட்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள், இத்திரைப்படம் வரிவிலக்கு அளிப்பதற்கு தகுதியானது அல்ல என்று பரிந்துரைத்துள்ளனர்.
படத்தைப் பார்த்த குழு உறுப்பினர்கள் படத்தில் உள்ள சில காட்சிகளுக்கும், விஜய் பேசும் சில வசனங்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
படத்தை வரி விலக்குக் குழுவில் உள்ள 7 பேர் பார்த்துள்ளனர். அவர்கள், வணிக வரி இணை ஆணையர் தேவேந்திர பூபதி, தமிழ் மொழி வளர்ச்சி (மொழி பெயர்ப்பு) இயக்குநர் ந பூபதி, தமிழ் மொழி வளர்ச்சி இயக்குநர் காமு சேகர், ஒளிப்பதிவாளர் கேவி அனந்த கிருஷ்ணன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், பாடகி எல் ஆர் ஈஸ்வரி, பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீ ஆகியோர்.

யு சான்றிதழ் பெற்றிருந்தாலும், திரைப்படத்தில் ஆங்கில மொழி கலப்பு அதிக அளவில் உள்ளதாலும், பெண்கள், குழந்தைகள் மனதைப் பாதிக்கும் வண்ணம் படத்தில் வன்முறை அதிகம் உள்ளதாலும் வரிவிலக்கு பெறுவதற்கு தகுதியற்றது என்று உறுப்பினர்கள் அனைவருமே பரிந்துரை செய்துள்ளனர்.
இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்த அரசு, தமிழ்நாடு கேளிக்கை வரிச்சட்டத்தின்படி 'தலைவா' திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க இயலாது என ஆணையிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











