குவைத்தில் மட்டுமல்ல இங்கேயும் பீஸ்ட் படத்தை தடை செய்யணும் – தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி எதிர்ப்பு
சென்னை: நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு எதிராக தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் முஸ்தபா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
துப்பாக்கி படத்தைத் தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்திலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டியுள்ளதற்கு தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
குவைத்தில் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு தடை விதித்துள்ள நிலையில், இப்படியொரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

பீஸ்ட் டிரைலரில்
கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் போல விஜய்யின் பீஸ்ட் படத்திலும் தீவிரவாதிகளுடன் நடிகர் விஜய் சண்டை போடுவது போன்ற குகை சண்டைக் காட்சிகள், தீவிரவாத அமைப்புகளை ஏவுகணைகளை லாஞ்ச் செய்து தாக்குவது போன்ற காட்சிகள் பீஸ்ட் டிரைலரில் இடம்பெற்று இருந்தன.

குவைத்தில் தடை
அந்த காட்சிகள் யூடியூபில் உலகம் முழுக்க டிரெண்டாகி வரும் நிலையில், பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்சிப்படுத்தியுள்ளனர் எனக் கூறி குவைத் நாட்டில் பீஸ்ட் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கடுமையான சென்சார் நிறுவனம் பீஸ்ட் படத்துக்கு சென்சார் வழங்க மறுத்த நிலையில், பீஸ்ட் குவைத்தில் வெளியாகாது என தெரியவந்துள்ளது.

பீஸ்ட்க்கு எதிராக அறிக்கை
பீஸ்ட் படத்திற்கு எதிராக தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் முஸ்தபா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பீஸ்ட் திரைப்படம் வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாக கூறி குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளாக
தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வருவதை வழக்கமாகக் கொண்டு, இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற தோற்றத்தை திரைத்துறையினர் உருவாக்கிவருகின்றனர். தங்களது சாதி அடையாளம் மற்றும் சாதி தலைவர்களின் பெயர்களைக் கூட திரைப்பட கதாபாத்திரங்களில் இடம் பெற்றால் அதற்கு கடும் எதிர்ப்புகளை சமுதாய அமைப்புகள் தெரிவிப்பதைப் பார்த்து வருகிறோம்.

இறையாண்மைக்கு எதிராக
ஆனால், இஸ்லாமியர்கள் மட்டும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாச்சாரத்தில் ஈடுபட்டு நாட்டின் அமைதிக்கும், இறையாண்மைக்கும் எதிராக செயல்படுவது போல தொடர்ந்து திரைப்படங்களில் காட்சிகள் இடம்பெறுவது மிகவும் வேதனை அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது.

உதவும் இஸ்லாமியர்கள்
2015 பெரு வெள்ளத்தின்போது இஸ்லாமிய அமைப்புகள் செய்த பணிகளை யாரும் மறந்துவிட முடியாது. கொரோனா பேரிடரில் உயிரிழந்தவர்களை சொந்தபந்தங்கள் கூட தொட மறுத்த உடல்களை, அடக்கம் செய்தவர்கள் இஸ்லாமிய அமைப்புகள். இப்படி பேரிடர் என்று வந்துவிட்டால், தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து களத்தில் இறங்கி நிவாரண பணிகளை இஸ்லாமிய இளைஞர்கள் இன்று வரை செய்து வருவதை யாரும் மறுக்க முடியாது. உண்மை நிலை இப்படி இருக்கும்போது இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக பீஸ்ட் திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரமலான் நோன்பு
தற்போது இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பைக் கடைபிடித்துவருகின்றனர். இந்தச் சூழலில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ள விஜயின் பீஸ்ட் திரைப்படம் வெளிவந்தால் பிரச்னை ஏற்படும். எனவே, பீஸ்ட் திரைப்படம் வெளியிட உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தடைவிதிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்'என அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











