கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது.. முதலமைச்சர், ரஜினி, கமல் வாழ்த்து!
சென்னை: ஞானபீட விருது என்பது நமது நாட்டில் மிக உயர்ந்த இலக்கிய விருதாகக் கருதப்படுகிறது. இந்திய மொழிகளில் சிறப்பாக எழுதிய எழுத்தாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. சாகித்ய அகாடமி விருதானது அங்கீகரிக்கப்பட்ட மொழிகளுக்கு ஆண்டு தோறும் தனித்தனியே வழங்கப்படும் இலக்கிய விருது. ஆனால் ஞானபீட விருது மொத்த மொழிகளிலும் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படும் விருது என்பதால் ஞானபீட விருது மிக உயரிய கௌரவமாக கருதப்படுகிறது.
இப்படி இருக்கையில் இந்த ஆண்டு தமிழ் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விருது அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, "ஞானபீட விருதை மண்ணுக்கும் மக்களுக்கும் காணிக்கையாக்குகிறேன்" என்று தெரிவித்தார். இந்த விருது இதற்கு முன்னர் இரண்டு முறை தமிழ் எழுத்தாளர்கள் பெற்றுள்ளனர். கடந்த 1975ஆம் ஆண்டு எழுத்தாளர் அகிலன் பெற்றுள்ளார். அதேபோல் கடந்த 2002ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் பெற்றார். அதன் பின்னர் 24 ஆண்டுகளுக்குப் பிறகு கவிப்பேரரசு வைரமுத்து பெறவுள்ளார்.

ஞானபீட விருது பெறவுள்ள கவிப்பேரரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில், " தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது!காலையில்தான் கவிப்பேரரசைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். சற்றுநேரத்தில் இந்த இனிய செய்தி வந்தடைந்து, அந்தச் சந்திப்பின் இனிமையை இன்னும் கூட்டியிருக்கிறது!
முதலமைச்சர்: தமிழில் இதுவரையில் அகிலனும் ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றிருந்த இவ்விருது, மரபுக் கவிதைகளிலும் நவீனத்திலும் விளையாடி, தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் நம் கவிப்பேரரசின் கைசேர்ந்து அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. தலைவர் கலைஞர் இருந்திருந்தால் கவிப்பேரரசை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நான் நின்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை வாழ்த்துகிறேன்! கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.

உலக நாயகன்: அதேபோல் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், " நெடிய பரம்பரை கொண்ட தமிழிலக்கியத்துக்கு மூன்றாவது முறையாக உயரிய இலக்கிய விருதான ஞானபீடம் கிடைத்திருக்கிறது.ஜெயகாந்தன் பெற்ற முந்தைய ஞானபீடத்துக்குப் பிறகு, கால் நூற்றாண்டு கடந்து தமிழுக்கு இந்தப் பெரும்பெருமையைச் சேர்த்திருக்கிறார் என் ஆப்தர் கவிப்பேரரசுவைரமுத்து. 'வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்' என்கிற கவிச் சொற்களோடு என் செவியில் விழுந்து இதயம் நுழைந்து நட்பில் கலந்த நண்பரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்" என்று வாழ்த்தி உள்ளார்.
சூப்பர் ஸ்டார்: அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், " நம் இந்திய நாட்டின் பெரும் மதிப்புமிக்க ஞான பீட விருதைப் பெற்றிருக்கும் என் அருமை நண்பர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











