தமிழ் ராக்கர்ஸ் சிறந்த வேலைக்காரன், பெரிய மூளைக்காரன்: மோகன்ராஜா
Recommended Video

சென்னை: தமிழ் ராக்கர்ஸ் வேலைக்காரன், பெரிய மூளைக்காரன் என்று இயக்குனர் மோகன்ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன், நயன்தாராவை வைத்து மோகன் ராஜா இயக்கியுள்ள வேலைக்காரன் படம் நாளை ரிலீஸாகிறது. இந்நிலையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மோகன் ராஜா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,

வேலைக்காரன்
அடுத்த வாரம் படம் தியேட்டரில் இருக்காது, சீக்கிரம் பார்த்துவிடுங்கள் என்று ட்வீட் போடுகிறார்கள். அருவி ஒரு வாரம் தாங்கும். வேலைக்காரன் 2 அல்லது 3 வாரம் தாங்கும். இன்று சினிமாவின் வேகம் அப்படி உள்ளது.

புதுப்படங்கள்
பொங்கலுக்கு புதுப்படங்கள் வரப்போகிறது. இதில் தமிழ் ராக்கர்ஸ், பல பிரச்சனைகளை தாண்டி வர வேண்டும். தமிழ் ராக்கர்ஸும் ஒரு நல்ல வேலைக்காரனாக இருந்தால் இந்த வேலைக்காரனை கொஞ்சம் தாமதாக ரிலீஸ் பண்ணச் சொல்லி கேட்டுக் கொள்கிறேன்.

மூளைக்காரன்
அவன் நல்ல வேலைக்காரன் தான். எனக்கு தெரிந்து அவனை விட சிறந்த வேலைக்காரன் வேறு யாரும் இல்லை. அவ்வளவு மூளைக்காரன். தமிழ் ராக்கர்ஸ் எத்தனை ராத்திரி, பகல் விழித்திருப்பான். எவ்வளவு வியர்வை சிந்தியிருப்பான் அவன். அந்த வியர்வைக்கு மரியாதை செய்து தான் நான் படம் பண்ணியிருக்கிறேன்.

ரிலீஸ்
அந்த வியர்வைக்கு மரியாதை அளிப்பவனாக இருந்தால் இதை கூட கொஞ்சம் தாமதமாக ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. இயக்குனர் நினைத்ததை படம் பண்ண முடியாது. எல்லா உணர்வுகளையும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுட்டு தயாரிப்பாளர், ஹீரோவை கன்வின்ஸ் பண்ணனும்.

கலை
சினிமா ஒரு கலை. கலைஞன் நினைத்ததை செய்ய வேண்டும். அப்படி ஒரு உரிமை, சுதந்திரம் எப்பொழுது வரப் போகிறது. எனக்கு அந்த உரிமையும், சுதந்திரமும் கிடைத்தது எங்க அப்பாவால். என் தந்தையால் நான் பிறக்கும்போதே இயக்குனராக பிறந்தேன்.

14 ஆண்டுகள்
நான் நினைத்ததை சொல்ல தனி ஒருவன் படத்தை எடுக்க எனக்கு 14 ஆண்டுகள் ஆனது. நான் தனி ஆள் கிடையாது. வேலைக்காரன் மூலம் நான் சமூக பிரச்சனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போயுள்ளேன். கேள்வி கேட்டு புரட்சி பண்ணிய காலம் முடிந்துவிட்டது. இது பதில் சொல்லி புரட்சி பண்ண வேண்டிய காலம் என்றார் மோகன் ராஜா.


Click it and Unblock the Notifications











