இசைஞானியோடு ஒரு மீட்டிங்.. வாழ்த்துகளோடு அன்பைப் பகிர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்.. எதுக்கு தெரியுமா?
சென்னை: இசைஞானி இளையராஜாவின் இசையைக் கேட்பவர்கள் அவரின் ரசிகராக மாறிவிடுவார்கள். அப்படி இருக்கும்போது தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும் அவரது ரசிகராக இல்லாமல் இருப்பாரா? அடுத்த வாரத்தில் லண்டனில் சிம்பொனி அரங்கேற்ற உள்ள இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.
இளையராஜா மீது அவரது இசையைத் தவிர பல விமர்சனங்கள் உள்ளது. காரணம், அவரது கோபமும் குணமும் என்று கூட கூறலாம். ஆனால் அதற்கு எல்லாம் அவருமே வெளிப்படையாக தனது வருத்தத்தை பதிவும் செய்துள்ளார். சட்டமேதை பாபாசாகேப் அம்பேத்கரை பிரதமர் மோடியுடன் அவர் ஒப்பிட்டது அரசியல் தளத்தில் சர்ச்சையை கிளப்பியது. அதன் பின்னர் இளையராஜாவை மாநிலங்களவை உறுப்பினராக பாஜக தேர்வு செய்தது.

ஆனால் தன்னைச் சுற்றிலும் நடக்கும் அரசியல் விளையாட்டுகளை கண்டு கொள்ளாமல், படங்களுக்கு இசை அமைப்பதில் கவனமாக செயல்பட்டு வந்தார், வருகிறார். ஒரே மாதத்தில் சிம்பொனி இசையை எழுதி அசத்தினார். இளையராஜா இதனைச் செய்த பின்னர், அவரது தீவிர ரசிகர்கள், "பேசறவன் பேசு, நான் ஒரு சிம்பொனி எழுதிட்டு வந்துடறேன்" என டீ சர்ட்டுகளில் பிரிண்ட் அடித்து அசத்தினார்கள்.
இளையராஜா: இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 3, ஆனால் அவர் அதே தினத்தில் கலைஞர் கருணாநிதிக்கும் பிறந்த நாள் என்பதால் தனது பிறந்த நாளை ஜூன் 2 ஆம் தேதிக்கு மாற்றிக் கொண்டார். காரணம், ஜுன் 3ஆம் தேதி அனைவரும் ஒருவருக்குத்தான் வாழ்த்து கூற வேண்டும் என தீர்க்கமாக முடிவெடுத்தார். மேலும் இளையராஜாவுக்கு பலரும் பல பட்டங்களை அதாவது பட்டப் பெயர்களை கௌரவமாக கொடுத்துள்ளார்கள். ஆனால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொடுத்த 'இசைஞானி' என்ற பட்டம் அவரது இசையைப் போலவே நிலைத்துவிட்டது.

முதலமைச்சர்: இந்நிலையில் இன்று அதாவது மார்ச் 2ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இசைஞானி இளையராஜாவை சந்தித்து, அவரது லண்டன் சிம்பொனிக்கு வாழ்த்து கூறினார். இது தொடர்பாக அவரே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், " இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது 🎼🎼 ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன். அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசை மூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணி மகுடம் எனத் திகழ வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இசைஞானி: மேலும் அவர் பேசும்போது நான் காரில் செல்லும் போது உங்கள் பாடல்களைத்தான் அதிகம் கேட்டுக் கொண்டு செல்கிறேன். மறைந்த பாடகர் பாலசுப்ரமணியம் உங்கள் இசையில்தான் அதிக பாடலைப் பாடியுள்ளார். உங்கள் பாடல்களைத்தான் நான் பெரும்பாலும் கேட்டுக் கொண்டே உள்ளேன் எனக் கூறினார். மேலும் இளையராஜா பேசும்போது, எனக்கு இசைஞானி என்ற பெயரை வைத்தது ஐயா தான் ( மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி) எத்தனையோ பெயர் வைத்தார்கள், ஆனால் அந்த பெயர்தான் நிலைத்துள்ளது என பூரிப்புடன் கூறினார். இது தொடர்பான வீடியோவையும் முதலமைச்சர் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











