S.K எனக்கு மாமனா மச்சானா? அமரன் வெற்றி விழாவில் நாங்கள் செய்த தவறு.. திருப்பூர் சுப்பிரமணியம் பளிச்!
திருப்பூர்: தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமானவர்களில் ஒருவர் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம். இவர் அவ்வப்போது அளிக்கும் பேட்டியில் தமிழ் சினிமாவின் கள நிலவரத்தை புட்டு புட்டு வைத்துவிடுகிறார். இன்னும் சொல்லப்போனால் அவரது விமர்சனத்தில் இருந்து பெரிய நடிகர்களில் இருந்து சின்ன நடிகர்கள் வரை என யாரும் தப்புவதில்லை. படம் வெற்றி என்றால் வெற்றி என்றும், தோல்வி என்றால் தோல்வி என்றும் உடைத்துப் பேசக்கூடிய நபராக உள்ளார்.
இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இந்த ஆண்டில் வெளியான படங்களில் ரெட்ரோ மற்றும் வீர தீர சூரன் பாகம் 2 படங்கள் எல்லாம் வெற்றிப் படங்கள் இல்லை. வேண்டுமானால் பெரிய நடிகர்களின் படங்கள் என்று கூறலாம். படத்திற்கு முதல் நாள் கூட்டம் கூடுகிறது. இரண்டாவது நாள் படுத்து விடுகிறது. மக்கள் வெட்டு குத்து நிறைந்த படங்களை விரும்புவதில்லை. நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத்தான் விரும்புகிறார்கள்.
சசிகுமாருக்கு தமிழ் சினிமாவில் என்ன மார்க்கெட் உள்ளது என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் டூரிஸ்ட் ஃபேமிலி படம் நன்றாக ஓடுகிறது என்றால் அதற்கு காரணம் படத்தின் கதை. தமிழ் சினிமாவில் ஓடாத தோல்விப் படங்களுக்கு எல்லாம் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். அதுதான் வருத்தமாக உள்ளது. வீர தீர சூரன் பாகம் 2 படம் தோல்விப் படம். ஆனால் அந்த படத்தின் நடிகருக்கு ஆள் உயர மாலை அணிவித்து கேக் வெட்ட சொல்கிறார்கள். அந்த நடிகர்களும் விவரம் தெரியாமல் படத்தை வெற்றி என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

சிவகார்த்திகேயன்: அமரன் படம் மிகச் சிறப்பாக ஓடியது. படத்தின் தயாரிப்பாளரான கமல் சார் அந்த படத்திற்கு வெற்றி விழா வைத்தார். அதில் நானும் கலந்து கொண்டேன். உண்மையைச் சொல்லுகிறேன், சிவகார்த்திகேயன் எனக்கு என்ன மாமனா? மச்சானா? அப்படி எல்லாம் எதுவும் இல்லை. ஆனால் அமரன் வெற்றிப் படம். வெற்றி விழாவுக்கு சென்ற நானே கூட தவறு செய்துவிட்டு தான் வந்தேன். அதாவது இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று விட்டது. எனவே சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் தனது சம்பளத்தை ரூபாய் 100 கோடிகளாக மாற்றிவிடுவார் என்று கூறினேன். ஆனால் அது நடக்கத்தான் போகிறது.
நடிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்: ரசிகர்கள் மனநிலை மாறிவிட்டது. அவர்களுக்கு பெரிய நடிகர்கள், சின்ன நடிகர்கள், பெரிய படம், சின்ன படம் என்ற வித்தியாசம் எல்லாம் எதுவும் கிடையாது. மக்களைப் பொறுத்தவரையில் படத்தின் கதை நன்றாக இருக்க வேண்டும், அவ்வளவுதான். ஆனால் அதை நடிகர்கள் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். நடிகர்கள் லாபத்தில் ஷேரிங் என்ற நிலைக்கு வரவேண்டும்.

வெற்றி விழா படங்கள்: என்னைக் கேட்டால், குடும்பஸ்தன் வெற்றிப் படம் அந்த படக்குழுவினர் வெற்றி விழா கொண்டாடலாம். வாழை மிகப்பெரிய வெற்றிப் படம். அமரன் வெற்றிப் படம், டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றிப் படம். டிராகன் வெற்றிப் படம். இந்த படக்குழுவினர் வெற்றி விழா கொண்டாடட்டும். குட் பேட் அக்லி வெற்றிப் படமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் படம் நன்றாக கலெக்ஷன் செய்தது. ஆனால் விடாமுயற்சி தோல்விப் படம் என்று நானே உறுதியாகக் கூறுவேன்" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தொடர்ந்து அவர் பேசும்போது தமிழ் சினிமா தற்போது உள்ள சிக்கலில் இருந்து மீள்வதற்கு அறிகுறியாக கடந்த ஆண்டில் இருந்து கதையம்சம் கொண்ட படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று வருகிறது. தயாரிப்பாளர்கள் எதிர்காலத்தில் கதாநாயகர்கள் கால்ஷீட் கிடைக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக படங்கள் பண்ணக்கூடாது. எதிர்காலத்தில் கதை கேட்டு, நல்ல கதையைத் தேர்வு செய்து, அந்த கதைக்கு ஏற்ற நடிகர்களை நடிக்க வைத்து படம் எடுக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு எப்போதும் வெட்டு, குத்து, கொலை, ரத்தம் என படம் எடுத்தால் மக்கள் படம் பார்க்க வரமாட்டேன் என்கிறார்கள்.
மேலும், மக்களும் ரொம்பவும் தெளிவாகிவிட்டார்கள். ஓடிடி தளங்களில் வெளிநாட்டுப் படங்கள் வெப் சீரிஸ்கள் என பலவற்றைப் பார்க்கிறார்கள். வெப் சீரிஸ்கள் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் வகையில் இருப்பதில்லை. பல வெப் சீரிஸ்களில் ஆபாசம் நிறைந்துள்ளது. மக்கள் தியேட்டருக்கு வருவதே, நல்ல கதையுள்ள படத்தை பார்க்கத்தான். எங்களுக்கும் சிறிய படங்களை நாங்கள் ரூபாய் 120 முதல் ரூபாய் 150 வரையில் தான் டிக்கெட் விலை. இந்த படங்களுக்கு நாங்கள் 50 சதவீதம் முதல் 55 சதவீதம் ஷேர் தருகிறோம். ஆனால் பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் நாங்கள் 70 சதவீதத்திற்கும் மேல் நாங்கள் ஷேர் தரவேண்டும், டிக்கெட் விலையும் ரூபாய் 190க்கு விற்பனை செய்கிறோம்.
கதைக்கு முக்கியத்துவம்: நடிகர்கள் பலரும் தற்போது வீட்டில் சும்மாதான் இருக்கிறார்கள். காரணம் அவர்களை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. பல நடிகர்கள் தங்களது பணத்தைப் போட்டே படம் எடுத்துக் கொண்டு உள்ளார்கள். லைக்கா நிறுவனம் தமிழ் சினிமாவிற்குள் வந்தபோது அவர்களிடத்தில் மிக அதிக அளவில் பணம் இருந்தது. அவர்கள் வந்ததும் சில படங்கள் மட்டும் ஹிட் கொடுத்தார்கள். அதன் பின்னர் அவர்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கதாநாயகர்ளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தயாரித்ததால்தான், இன்றைக்கு தயாரிப்பில் இருந்தே வெளியேறும் சூழலுக்குச் சென்றுள்ளார்.
மக்கள் விருப்பம்: மக்களுக்கு சின்ன கதாநாயகன், பெரிய கதாநாயகன் என்ற பாகுபாடு எல்லாம் எதுவும் இல்லை. அவர்களுக்கு படத்தின் கதை நன்றாக இருக்கவேண்டும். படம் தரமானதாக இருக்க வேண்டும், அவ்வளவுதான். ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. ஆனால் அதேபோல் அடுத்தடுத்து அவர் படம் கொடுத்தால் ரசிகர்கள் ரசிக்க மாட்டார்கள். மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆன படங்களில் முதல் நாள் மட்டும்தான் ரெட்ரோ படத்திற்கு ஆட்கள் அதிகமாக இருந்தார்கள். இரண்டாவது நாளில் ஆட்களே இல்லை. தமிழ்நாடு முழுவதும் இரண்டாவது நாளில் இருந்து டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு காட்சிகளை அதிகரித்தார்கள், தியேட்டர்களை அதிகரித்தார்கள் என்றால் அதற்கு காரணம் மக்கள் டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படத்தை விரும்புகிறார்கள் என்றும் பேசினார்.


Click it and Unblock the Notifications











