Vijay - Ajith: விஜய் - அஜித் போயிட்டா என்ன? ஒரு பாயிண்டைச் சொல்லி கோலிவுட்டை கப்சிப் ஆக்கிய பிரபலம்!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் வெகு சில நடிகர்களில் நடிகர் அஜித் மற்றும் விஜய் மிகவும் முக்கியமானவர்கள். இவர்களின் படம் ரிலீஸ் ஆகின்றது என்றாலே தியேட்டர் உரிமையாளர்களுக்கு சந்தோஷம்தான். ஆனால் தற்போது விஜய் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகுவதாக அறிவித்துவிட்டார். அவருடைய 69வது படமே திரைவாழ்க்கையில் அவரது கடைசிப் படம் என தெரிவித்துள்ளார். அதேபோல் அஜித் சினிமாவில் இருந்து விலகி, கார் ரேஸ், பைக் ரேஸ், பைக்கில் நாடுகளைச் சுற்றி வருவது என பெரிய ப்ளானே வைத்துள்ளதால், சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக கூறப்படுகின்றது. இப்படியான நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்தின் கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவரது நடிப்பில் இதுவரை 68 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான தி கோட் படம் ரூபாய் 500 கோடிகள் வரை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீண்டகாலமாகவே விஜய் அரசியலுக்கு வரப்போகின்றார் என்ற பேச்சுகள் எழுந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தனது கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் களத்தில் குதித்தார்.

தளபதி 69: மேலும் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு, சினிமாவில் இருந்து முழுவதுமாக ஒதுங்கவுள்ளதாகவும், முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தார். இப்படியான நிலையில் கட்சியின் மாநாட்டினையும் நடத்தி முடித்துள்ளார். தற்போது தனது கடைசிப் படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தினை ஹெச். வினோத் இயக்குகின்றார். விஜய் சினிமாவில் இருந்து வெளியேறப்போவது உறுதியாகிவிட்டது.

இப்படியான நிலையில் அஜித்குமார் ஏற்கனவே வீனஸ் என்ற பெயரில் பைக் டூர் கம்பெனியைத் தொடங்கியுள்ளார். தற்போது தனது பெயரில் கார் ரேஸ் பந்தய அணியை உருவாக்கியுள்ளார். அடுத்த ஆண்டு ஐரோப்பாவில் நடைபெறும் ஜி.டி 4வகை கார் பந்தயத்தில் இவரது அணி களமிறங்கவுள்ளது. இதற்கான தீவிரப்பயிற்சியில் அஜித்குமார் உள்ளார்.
குட் பேட் அக்லி: இதுமட்டும் இல்லாமல் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகின்றார். இரண்டு படங்களின் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. இதனால் இரண்டு படங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விஜய்- அஜித்: இப்படியான நிலையில் அஜித்குமார் லண்டனில் வீடு கட்ட இடம் வாங்கியுள்ளதாகவும், விரைவில் அங்கு வீடு கட்டி குடும்பத்துடன் செட்டில் ஆகப்போவதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றது. இதனால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா மாட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார், அஜித்தின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அவரும் சினிமாவில் இருந்து வெளியேறிவிடுவார் போலத்தெரிகின்றது. இப்படியான நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், " விஜய், அஜித்தை நம்பி தியேட்டர்கள் இல்லை. இவர்கள் சினிமாவை விட்டு போனால் திரைத்துறை அழிந்து விடாது" எனத் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











