மக்களை ஏமாத்தறார்... வெள்ளை சட்டைல அவ்வளவும் வேஷம்... வில்லன் நடிகரை விளாசித் தள்ளும் ஹீரோயின்
மும்பை: வெள்ளை சட்டைப்போட்டுக்கொண்டு, ஏழை போல் காண்பித்து மக்களை ஏமாற்றி வருவதாக, வில்லன் நடிகரை விளாசித் தள்ளியுள்ளார் நடிகை தனுஶ்ரீ தத்தா.
தமிழில், தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் இந்தி நடிகை தனுஶ்ரீ தத்தா.
இவர், ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற இந்தி படத்தில் நடித்தபோது, வில்லன் நடிகர் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் இதுகுறித்து வெளியே சொன்னதால் அவர் ஆதரவாளர்கள் மிரட்டினார்கள் என்றும் கூறியிருந்தார்.

காலா வில்லன்
நானா படேகர், தமிழில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம், ரஜினி நடித்த காலா படங்களில் நடித்தவர். தனுஶ்ரீயின் இந்த மீ டூ புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரை அடுத்து இந்தி நடிகர், நடிகைகள் பலர் தனுஸ்ரீக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

போலீஸில் புகார்
பின்னர், நானா படேகர் மீது மும்பை ஓஸிவாரா போலீஸ் நிலையத்தில் தனுஶ்ரீ புகார் அளித்தார். விசாரித்த போலீசார், நானாவுக்கு எதிராக, தேவையான சாட்சியங்கள் இல்லாததால், விசாரணையை தொடரமுடியவில்லை என கூறி முடித்துவிட்டனர்.

வழக்குத் தொடர்ந்தார்
இதை எதிர்த்து மும்பை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார் தனுஶ்ரீ தத்தா. இந்நிலையில் தனது வழக்கறிஞர் நிதின் சத்புதேவுடன் செய்தியாளர்களை சந்தித்தார் தனுஶ்ரீ.

நாம் பவுண்டேசன்
அப்போது அவர் கூறும்போது, உங்களிடம் பணம் இருந்தால் நீதியும் மரியாதையும் தானாக கிடைத்துவிடும். அது இல்லையென்றால் கிடைக்க வாய்ப்பில்லை. நானா படேகரிடம் பணம் இருக்கிறது. அவர், நாம் பவுண்டேசன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதற்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பணம் குவிகிறது.

ஏமாற்றுவது எளிது
ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்தபடி, தன்னை ஏழை போல் காட்டுகிறார். அது பெரிய பொய். மக்களை ஏமாற்றுவது எளிது. வெள்ளை குர்தாவும் காந்தி தொப்பியும் போட்டுக்கொண்டால் நேர்மையானவரா? அசராம் பாபு கூட வெள்ளை குர்தா அணிந்திருக்கிறார்.

500 வீடுகள்
நானா படேகர் தனக்கு வரும் பணத்தை ஏழை விவசாயிகளுக்கு கொடுக்கிறாரா என்பதை யார் கண்காணிப்பது? சில மாதங்களுக்கு முன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, அவர் 500 வீடுகள் கட்டிக்கொடுத்ததாகச் சொன்னார்கள். யார் எண்ணிப் பார்த்தார்?

வேற்றுக்கிரக வாசிகள்
நாளையே, மாலியில் உள்ள திம்பக்து நகரத்துக்கு நான்தான் ராணி. நிலவில் பெரிய பங்களா கட்டியிருக்கிறேன். வேற்றுக்கிரக வாசிகளுக்கு 500 வீடுகளை கட்டிக்கொடுத்திருக்கிறேன் என்றால் நம்புவீர்களா? இப்படித்தான் அவர் பணத்தை வசூலித்து ஏமாற்றிவருகிறார் என்றார்.
தனுஶ்ரீயின் இந்தப் பரபரப்புக் குற்றச்சாட்டு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











