ஆபாசமா பேசினாராம்... மீ டு புகார் கொடுத்த நடிகை தனுஶ்ரீ தத்தா வழக்கறிஞர் மீது பாலியல் வழக்கு
மும்பை: இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஶ்ரீ தத்தாவின் வழக்கறிஞர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழில், தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்தவர் இந்தி நடிகை தனுஶ்ரீ தத்தா. இவர், 2008-ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற இந்தி படத்தில் நடித்தார்.
அப்போது நடிகர் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் இதுகுறித்து வெளியே சொன்னதால் அவர் ஆதரவாளர்கள் மிரட்டினார்கள் என்றும் காரில் குடும்பத்தினரோடு சென்றபோது தாக்கப்பட்டேன் என்றும் கூறியிருந்தார்.

நானா படேகர்
இந்த மீ டூ புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நானா படேகர், தமிழில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம், ரஜினி நடித்த காலா படங்களில் நடித்தவர். இதையடுத்து இந்தி நடிகர், நடிகைகள் பலர் தனுஸ்ரீக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

தனுஶ்ரீ புகார்
பின்னர் நானா படேகர் மீது, மும்பை ஓஸிவாரா போலீஸ் நிலையத்தில் தனுஶ்ரீ புகார் அளித்தார். விசாரித்த போலீசார், இந்த வழக்கில் நானா படேகருக்கு எதிராக, போதுமான சாட்சியங்கள் இல்லாததால், விசாரணையை தொடர முடியவில்லை என கூறி முடித்துவிட்டனர்.

நிதின் சத்புதே
இதை எதிர்த்து மும்பை அந்தேரியில் உள்ள மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் தனுஶ்ரீ தத்தா. அவர் சார்பில் வழக்கறிஞர் நிதின் சத்புதே, இந்த மனுவைத் தாக்கல் செய்தார். வழக்கு நடந்து வருகிறது.

பாலியல் புகார்
இந்நிலையில், வழக்கறிஞர் நிதின் சத்புதே மீது, 47 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளார். அதில், குழந்தைகளுக்கு பூங்கா கட்டுவது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்றும் பின்னர் தொலைபேசியில் அவர், ஆபாசமாகவும் அநாகரிகமாகவும் பேசினார் என்றும் கேர்வாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் கொடுத்துள்ளார்.

மகளிர் ஆணையம்
இதுகுறித்து விசாரிக்க அந்தப் பெண்ணை, மகளிர் ஆணையம் அழைத்தது. அப்போது வந்தபோதும் நிதின் சத்புதே அவரை ஆபாசமாக பேசியதாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











