ம்ஹூம்...முதல்ல இருந்து ஆரம்பிங்க... பாலியல் தொல்லை வழக்கில் நடிகை தனுஶ்ரீ வழக்கு
மும்பை: இந்தி நடிகர் நானா படேகர் மீதான பாலியல் வழக்கில், போலீசாருக்கு எதிராக நடிகை தனுஶ்ரீ தத்தா மும்பை நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
தமிழில், தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் விஷால் ஜோடியாக நடித்திருப்பவர் இந்தி நடிகை தனுஶ்ரீ தத்தா. இவர், 2008-ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற இந்தி படத்தில் நடித்தார். இதன் பாடல் காட்சி படப்பிடிப்பின்போது, நடிகர் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் இதுகுறித்து வெளியே சொன்னதால் நானா படேகரின் ஆதரவாளர்கள் மிரட்டினார்கள் என்றும் காரில் குடும்பத்தினரோடு சென்றபோது தாக்கப்பட்டேன் என்றும் கூறியிருந்தார்.

இந்த மீ டூ புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நானா படேகர், தமிழில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம், ரஜினி நடித்த காலா படங்களில் நடித்தவர்.
இதுபோல் டைரக்டர் விவேக் அக்னிகோத்ரி சாக்லேட் என்ற இந்தி படப்பிடிப்பின்போது, நிர்வாணமாக நிற்கும்படி கூறினார் என்றும் பாலியல் புகார் கூறியிருந்தார் தனுஶ்ரீ. இதையடுத்து இந்தி நடிகர், நடிகைகள் பலர் தனுஸ்ரீக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
பின்னர் நானா படேகர் மீது, மும்பை ஓஸிவாரா போலீஸ் நிலையத்தில் தனுஶ்ரீ புகார் அளித்தார். விசாரித்த போலீசார், இந்த வழக்கில் நானா படேகருக்கு எதிராக தேவையான சாட்சியங்கள் இல்லாததால், விசாரணையை தொடரமுடியவில்லை என கூறி முடித்துவிட்டனர்.
இந்த முடிவை எதிர்த்து மும்பை அந்தேரியில் உள்ள மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார் தனுஶ்ரீ தத்தா. அவர் சார்பில் வழக்கறிஞர் நிதின் சத்புதே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், நானா படேகர் மீதான பாலியல் புகாரை விசாரித்த அதிகாரிகள் சாட்சியங்கள் இல்லை என்று கூறி பொய்யான அறிக்கை அளித்துள்ளனர். நேரடி சாட்சியங்களின் வாக்குமூலங்களை அவர்கள் பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர். சேகரித்த சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை.
இதனால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும். அதேபோல ஊழல் தடுப்பு பிரிவினரும் வழக்குத் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றி முதலில் இருந்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications