சினிமாவாகுது தமிழச்சி மித்தாலி ராஜ் கதை.. அசத்த ரெடியாகிறார் டாப்ஸி!
சென்னை: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜின் வாழ்க்கைக் கதை சினிமாவாகிறது.
இது பயோபிக் காலம். பிரபலங்களின் வாழ்க்கைக் கதையை படமாக்கி வருவது இப்போதைய டிரெண்ட். 'இந்திய வேகம்'மில்கா சிங், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நம்ம 'தல'டோனி, ஆகிய விளையாட்டு வீரர்களின் கதைகள் சினிமாவாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

பேட்மின்டன் வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோரின் கதைகள் இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், 'தமிழச்சி'மித்தாலி ராஜ் கதையும் இணைந்திருக்கிறது!
இந்திய பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான மித்தாலி ராஜின், வாழ்க்கை கதையில் நடிக்க இருப்பது, 'ஆடுகளம்'டாப்சி! 'சபாஷ் மிது' (Shabaash Mithu) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை வயாகாம்18 ஸ்டூடியோ தயாரிக்கிறது.
இந்த நிறுவனம் தான், வித்யாபாலனின் கஹானி, கங்கனா ரனவத் நடித்த குயின், பிரியங்கா சோப்ராவின் மேரி கோம், தீபிகா படுகோனின் பத்மாவத் படங்களை தயாரித்திருந்தது. அதாவது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை தயாரித்திருந்தது.
மித்தாலியின் பிறந்த நாளான இன்று இதை அறிவித்திருக்கிறது வயாகாம் 18! இந்த நிறுவனத்தின் சிஓஓ அஜித் அந்தாரே கூறும்போது, 'ஒரு வருடத்துக்கு முன்பே, மித்தாலியின் வாழ்க்கை கதையை படமாக்கும் ஐடியா எனக்குத் தோன்றியது. இப்போது கதையை எழுதி முடித்துவிட்டோம். அவர் கேரக்டரில் டாப்ஸி நடிக்கிறார்' என்றார். இந்தப் படத்தை ராகுல் தோலக்கியா( Rahul Dholakia) இயக்குகிறார். இவர் ஏற்கனவே பர்ஸானா, மும்பை கட்டிங், லம்ஹா, ராயிஸ் ஆகிய இந்திப் படங்களை இயக்கியவர்.
மித்தாலி கதையில் நடிப்பது பற்றி டாப்ஸி கூறும்போது, 'மித்தாலியின் கதையில் நடிப்பது எனக்கு பெருமை. இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கு அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அந்த அணியை மாற்றியவர் அவர். இதில் நடிக்கும் தினத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்' என்கிறார் உற்சாகமாக.


Click it and Unblock the Notifications











