சிறையில் அடைக்கப்படும் அல்லு அர்ஜுன்.. அரசியல் தலையீடு இல்லை.. தெலங்கானா முதலமைச்சர் விளக்கம்!
ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக எதிர்க்கட்சிகள் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக ஏகப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் பேரணிகளின் போது பலர் உயிரிழந்துள்ளனர். அதற்காக முதலமைச்சரையோ மற்ற அரசியல்கட்சி தலைவர்களையோ கைது செய்துள்ளீர்களா எனக் கேள்விகள் கிளம்பியுள்ளன.
சந்தியா தியேட்டர் நிர்வாகம் அல்லு அர்ஜுன் தியேட்டரில் படம் பார்க்க வரப்போகிறார் பந்தோபஸ்த்து கொடுங்க என ஏற்கனவே போலீஸாரிடம் கோரிக்கை வைத்ததாகவும் அறிவித்துள்ளனர். இந்நிலையில், அல்லு அர்ஜுனை திட்டமிட்டு வெள்ளிக்கிழமையன்று கைது செய்ததற்கு பின்னணியில் அரசியல் சதி உள்ளது என புகார்கள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுன் கைது விவகாரத்தில் யாருடைய தலையீடும் இல்லை என்றும் கூட்ட நெரிசலில் பெண் பலியான மரண வழக்கின் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தான் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
புஷ்பா 2வால் வந்த வினை: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை ரசிகர்களுடன் அல்லு அர்ஜுன் பார்க்க வந்ததால் பரிதாபமாக ஒரு பெண்ணின் உயிர் கூட்ட நெரிசலில் சிக்கி பறிபோனது. அதன் காரணமாக தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார். அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்கு பின்னணியில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக எதிர்கட்சிகள் பேசத் தொடங்கியுள்ளன.
முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பதில்: தெலங்கானாவின் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜுன் கைது நடவடிக்கையில் யாருடைய தலையீடும் இல்லை என்றும் கூட்ட நெரிசலில் உயிரிழந்த நபர் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீஸார் கைது செய்து விசாரித்து வருவதாகவும் சட்டம் தனது கடமையை செய்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் அளித்த புகார்: புஷ்பா 2 படத்தையும் அல்லு அர்ஜுனையும் பார்க்க ஆசை ஆசையாக குடும்பத்துடன் வந்த ரசிகர் பரிதாபமாக தனது 39 வயது மனைவியை கூட்ட நெரிசலில் பறிகொடுத்தார். அவர்களின் மகனும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தனது மனைவியின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தியேட்டர் ஓனர் கைது: இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சந்தியா தியேட்டர் ஓனர் மற்றும் தியேட்டர் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கே நடைபெற்ற வழக்கின் முடிவில் நீதிபதிகள் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அல்லு அர்ஜுனை சிறை வைக்க உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சோகத்தில் ரசிகர்கள்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு எப்படியாவது ஜாமின் கிடைத்துவிடும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது அவருக்கு 14 நாட்கள் சிறை என்கிற தகவல் தெரிந்ததும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நிகழாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











