Pushpa 2 movie: மக்களோட பாதுகாப்பைவிட படத்தோட பிரமோஷன் முக்கியமில்லை.. தெலங்கானா டிஜிபி காட்டம்!
ஐதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான புஷ்பா 2 படம், கடந்த சில தினங்களிலேயே சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 1500 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்து தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி ஹைதராபாத்தில் சந்தியா திரையரங்கில் இந்த படத்தின் பிரிமியர் ஷோவின் போது நடந்த அசம்பாவிதம் மிகப்பெரிய அளவில் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியாகியுள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜுன்: நடிகர் அல்லு அர்ஜுன். ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது புஷ்பா 2 படம். இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான நிலையில் அந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை ரசிகர்களுடன் இணைந்து படக்குழுவினரும் கொண்டாடினர். இதையடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் முதல் பாகத்தை காட்டிலும் பிரம்மாண்டமாக அமைய வேண்டும் என்பதில் உறுதி கொண்ட படக்குழுவினர் அடுத்த பாகத்தை மிகப்பெரிய அளவில் அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கினர்.
ரசிகை உயிரிழந்த சம்பவம்: இந்தப் படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அதற்கு முன்தினம் நடந்த சம்பவம் தற்போதுவரை மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. கடந்த 4ம் தேதி ஹைதராபாத்தின் சந்தியா திரையரங்கில் நடந்த படத்தின் பிரீமியர் ஷோவில் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அவர்கள் திடீரென பங்கேற்றதால் விஷயம் கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிக அளவில் அங்கு திரண்டதாக கூறப்பட்டது. இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.
அல்லு அர்ஜுன் கைது: அவரது ஒன்பது வயது மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவத்தில் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அல்லு அர்ஜுன் கடந்து சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். சில நடைமுறை சிக்கல்களால் அவருக்கு உடனடியாக ஜாமீன் கிடைக்காத நிலையில், இரவு முழுவதும் சிறையில் இருந்தார். மறுநாள் காலையில் தான் அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய தெலங்கானா முதல்வர், இத்தகைய சம்பவத்திற்கு காரணமான நடிகர் அல்லு அர்ஜுனை சக நடிகர்கள் கொண்டாடி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
தெலங்கானா டிஜிபி காட்டம்: இந்நிலையில் நேற்று மாலை இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அல்லு அர்ஜுன் நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றும் ஆனால் அதற்கு தன்னையே குற்றம் சாட்டுவது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து தெலுங்கானாவின் சிக்கதபள்ளி டிஜிபி ஜிதேந்தர் காட்டம் தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் மிகப்பெரிய ஹீரோவாக இருந்தாலும் ஒரு இடத்திற்கு வரும்போது அங்கு நிலவும் களநிலவரம் குறித்து தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பொது மக்களின் பாதுகாப்பை காட்டிலும் படத்தின் பிரமோஷன் முக்கியமானது இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தந்து ஒவ்வொருவரும் நாட்டின் பிரஜைகளாக பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











