ஜெய்பீம் படத்துக்கு தேசிய விருது கிடைக்கல.. ஆனால் புஷ்பாவுக்கு கிடைத்தது.. வெளுத்த தெலங்கானா அமைச்சர்
ஹைதராபாத்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படம் உலகளவில் மெகா ஹிட்டாகியிருக்கிறது. விமர்சன ரீதியாக படம் கொஞ்சம் சொதப்பினாலும் வசூலில் சக்கைப்போடு போட்டிருக்கிறது. 1500 கோடி ரூபாய்க்கும் மேல் அந்தப் படம் வசூலித்திருந்தாலும் அதைவிடவும் சென்சேஷனலாக இருப்பது அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதும்; அதற்கு பிறகு வெடித்த பிரச்னையும்தான். இந்தச் சூழலில் தெலங்கானா அமைச்சர் சீத்தாக்கா அதிரடியான கருத்தினை தெரிவித்திருக்கிறார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா படம் மெகா ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து அந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி சமீபத்தில் ரிலீஸானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவான அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. ஆந்திரா, தெலங்கானா மாநிலம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே படம் நல்ல ஹிட்தான். முக்கியமாக உலகளவில் அந்தப் படம் 1500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சோக சம்பவம்: இதற்கிடையே புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை காண்பதற்கு ஹைதராபாத்தில் இருக்கும் தியேட்டர் ஒன்றுக்கு அல்லு அர்ஜுன் முன்னறிவிப்பு எதுவுமின்றி வந்தார். அதன் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்; சிறுவன் ஒருவன் கோமாவுக்கு சென்றான். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் அல்லு அர்ஜுனுக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்தார்கள்.
அல்லு அர்ஜுன் கைது: அதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். சில மணி நேரங்கள் சிறையில் இருந்த அவர் பிறகு ஜாமீன் பெற்று விடுதலையானார். அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது ரசிகர்களும், தெலுங்கு திரையுலகினரும் ஒன்று திரண்டனர். அதேசமயம் அல்லு அர்ஜுன் ஒன்றும் கிட்னியையோ, கண்ணையோ இழக்கவில்லை. அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் திரைத்துறையினர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண் குறித்தும், கோமாவுக்கு சென்ற சிறுவன் குறித்தும் எதற்காக பேசவே இல்லை என்று தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி காட்டமாக பேசியிருந்தார்.
ஏசிபியும் காட்டம்: அதேபோல் தெலங்கானா மாநில காவல் துறையின் துணை ஆணையர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, "நீதிமன்றத்தின் முன் குற்றஞ்சாட்டப்பட்ட நடிகர் விசாரணையை பாதிக்கும் வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து நீதிபதிபோல பேசுகிறார். இப்படியே சென்றால் ஜாமீன் ரத்து செய்யப்படும். ஹீரோ ஒர்ஷிப் படங்களை ரசிப்பதைவிடவும் பா.இரஞ்சித் போன்ற இயக்குநர்கள் எடுக்கும் படங்களை ரசிகர்கள் பார்க்க வேண்டும்" என்று கூறினார். இதற்கிடையே நேற்று அல்லு அர்ஜுனின் வீட்டின் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.
அமைச்சரின் கருத்து: இந்நிலையில் தெலங்கானா மாநில அமைச்சர் சீத்தாக்கா இந்த விவகாரம் குறித்து பேசுகையில், "ஜெய்பீம் போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. ஆனால் செம்மர கடத்தல் கும்பல் பற்றிய புஷ்பா படத்துக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. ஒரு கடத்தல்காரர் ஹீரோவாகவும், காவல் துறையை வில்லனாகவும் சித்தரித்த படம்தான் புஷ்பா" என்று கூறியிருக்கிறார். அவரது இந்தக் கருத்து ரசிகர்களிடையே வெகுவாக கவனத்தை ஈர்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











