இனி என்னாகும் தெலுங்கு திரை உலகம்? ஒரு பார்வை
ஹைதராபாத்: ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா உருவாகிவிட்ட நிலையில் இப்போது தெலுங்கு திரை உலகம் விழிபிதுங்கி நிற்கிறது.
தெலுங்கானா பிரிப்பு அறிவிக்கப்பட்டது ..அதுவும் ஹைதராபாத்தை 10 ஆண்டுக்கு பொதுதலைநகராக்கப் போகிறோம் என்று அறிவித்தும் வேறு இருக்கின்றனர். சென்னைக்கு வெளியே ஹைதராபாத்தான் சினிமா கோலோச்சும் இடமாக இருந்து வருகிறது. இப்போது எல்லாத்துக்குமே ஆப்பா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் அரசியல் வேறு... குறிப்பாக சிரஞ்சீவி குடும்பத்துக்குத்தான் சிக்கல்.. தெலுங்கானா பிரிப்புக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து தடுக்காமல் போனதற்காக ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதி மக்கள் கடுமையாக கோபத்தில் இருக்கின்றனர்.

சிரஞ்சீவி குடும்பத்து படங்களுக்கு தடை
இதனால் சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண், மகன் ராம் சரண் தேஜா ஆகியோரது படங்கள் ரிலீஸுக்கு தயாரான நிலையில் வெளியிடப்பட முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சனை முடியும் வரை சிரஞ்சீவி குடும்பத்து படங்களை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கொந்தளிக்கிறார் ஆந்திர பல்கலைக் கழகங்களின் மாணவர் கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் காந்த ராவ்.

பெரும் சிக்கலில் இருக்கிறோம்..
தெலுங்கானா பிரிக்கப்பட்டது முதலே தெலுங்கு சினிமா துறை பெரும் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறது என்கிறார் தெலுங்கு தயாரிப்பாளர் என்வி பிரசாத்.

தெலுங்கானாவில் இருந்து 40% வருமானம்
இந்தியாவிலேயே அதிக திரையரங்குகள் இருக்கும் மாநிலம் ஆந்திரா. மொத்த திரை அரங்கங்களின் எண்ணிக்கை 2,800. இதில் 40% வருவாய் தெலுங்கானா பிரதேசத்தில் இருந்துதான் கிடைக்கிறது.

தெலுங்கானாவில் 800 தியேட்டர்கள்
தெலுங்கானாவில் 800 தியேட்டர்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சோகம் என்னவெனில் இதில் 20% உரிமையாளர்கள்தான் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள். இப்பொழுது சீமாந்த்ரா உரிமையாளர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பதுதான் கேள்வி.

ஒட்டுமொத்த சினிமாவே சீமாந்த்ராவில்...
ஆனால் பெரும்பாலான நடிகர்கள், தயாரிப்பாளர், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்க உரிமையாளர்கள் சீமாந்த்ராவில்தான் இருக்கின்றனர்.

ஆண்டுக்கு ரூ1,500 கோடி
தெலுங்கு திரை உலகம் ஒரு ஆண்டுக்கு சுமார் 200 படங்களை தயாரிக்கிறது. சுமார் ரூ1,500 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இவ்வளவு தொகையும் ஹைதராபாத்தில் முதலீடு செய்யப்பட்ட நிலையில் ஹைதராபாத்தின் கதியே கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் இனி என்னவாகும் என்று கன்னத்தில் கை வைத்துக் கிடக்கிறது தெலுங்கு உலகம்!
தெலுங்கானா தனி சினிமா உலகை உருவாக்குமா? அல்லது 'கலையை கலையோடு பார்க்கனும் அரசியலோடு பார்க்கக் கூடாது என்று சமரசம் செய்து கொள்ள்ளுமா? என்பதே முதன்மை கேள்வி.


Click it and Unblock the Notifications











