கொரோனா நெருக்கடியில் உதவி.. சோனு சூட்டுக்கு கோயில் கட்டிய கிராமம்.. அவர் ரியாக்ஷனை பாருங்க!
ஐதராபாத்: நடிகர் சோனு சூட்டை கவுரவிக்கும் விதமாக தெலங்கானாவில் அவருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா காலத்தில் திடீரென லாக்டவுன் பிறபிக்கப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு பகுதிகளில் சிக்கிக்கொண்டனர்.
ரயில், பேருந்து, விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டதால், அவர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தனர்.

தனி பேருந்து
பணம் இல்லாமலும் சாப்பாட்டுக்கு வழியில்லாமலும் கஷ்டப்பட்டனர். இந்நிலையில், பிரபல வில்லன் நடிகர் சோனு சூட், அவர்கள் சொந்த ஊர் செல்ல, தனது சொந்த பணத்தைச் செலவழித்து உதவி செய்து வந்தார். விமானம் மூலமாகவும் தனி பேருந்துகளை ஏற்பாடு செய்தும் அனுப்பி வைத்தார்.

மக்கள் பாராட்டு
கொரோனா நோயாளிகளை காப்பாற்றப் பாடுபடும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஓய்வெடுக்க, தனது ஓட்டலை கொடுத்தார். அவருடைய மனிதாபிமான செயலை, இந்தியா முழுவதும் மக்கள் பாராட்டினர். சமூக வலைத்தளங்களில் அவரை புகழ்ந்து தள்ளினர்.

கல்வி உதவித்தொகை
அவர் வில்லன் அல்ல, நிஜ ஹீரோ என்று கூறினர். அவர் இப்போதும் உதவிகள் செய்து வருகிறார். கஷ்டப்படும் விவசாயிகள், மாணவர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார். பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார்.

துப்ப தண்டா
இதையடுத்து அவரைக் கவுரவிக்கும் விதமாக தெலங்கானா மாநிலத்தில் துப்ப தண்டா என்கிற கிராமத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது. பொதுவாக ரசிகர்கள் நடிகைகளுக்குத்தான் கோயில் கட்டுவார்கள். ஆனால், சோனு சூட்டின் சேவையை மனதாரப் பாராட்டி ஒரு கிராமமே இந்த கோயிலை கட்டியுள்ளது.

பாரம்பரிய உடை
மாவட்ட அதிகாரிகளின் உதவியுடன் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் கோயில் திறக்கப்பட்டது. பாரம்பரிய உடை அணிந்த கிராமத்துப் பெண்கள் பாடல்கள் பாடி, ஆரத்தி எடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். 'கொரோனா காலகட்டத்தில், இந்தியாவின் 28 மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அவர் உதவியுள்ளார்.

மனிதாபிமான செயல்
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு மனிதாபிமான செயல் விருதை வென்றுள்ளார். அவர் செய்த உதவி, உலகத்தாரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவருடைய மனிதாபிமான செயலுக்காக, இந்தக் கோயிலை கட்ட முடிவு செய்தோம்' என்று தெரிவித்துள்ளார் அந்த கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார்.

தகுதியானவன் இல்லை
இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள நடிகர் சோனு சூட், 'இதற்கு நான் தகுதியானவன் இல்லை' என்று கூறியுள்ளார். சோனு சூட், தமிழில் கள்ளழகர் மூலம் வில்லனாக அறிமுகமானார்.தொடர்ந்து, மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உட்பட பல படங்களில் வில்லனாக நடித்தார். இப்போது விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











