அய்யய்யோ விஜய்யைப் பத்தி நான் தப்பா சொல்லல.. அந்தர் பல்டி அடித்த அனிதா சம்பத்!
கள்ளக்குறிச்சி: ஒட்டுமொத்த தமிழ்நாடும் பதற்றமாக ஒரு விஷயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டு உள்ளது என்றால் அது கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்கள் தொடர்பாகத்தான். முதலில் 20க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் கிட்டத்தட்ட 100 பேர் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் விஷ சாராயம் அருந்தியவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்ததால் தற்போதைய நிலவரப்படி, அதாவது ஜூன் மாதம் 21ஆம் தேதி காலை நிலவரப்படி 45 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் தொடர்ந்து நீடிக்கின்றது. விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூபாய் 10 லட்சம் நிவாரணமாக வழங்கியுள்ளது.

கள்ளக்குறிச்சிக்கு சென்ற விஜய்: இந்த நிகழ்வு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், தமிழ்நாடு அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து நேற்று காலை அறிக்கை விட்டிருந்தார்.
அதன் பின்னர் நேற்று மாலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஷச்சாராயம் அருந்தியவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றார். இது தொடர்பாக புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது. மேலும் தமிழில் செயல்பட்டு வரும் பல்வேறு ஊடகத்தினரும் செய்தியாக்கினர். விஜய் கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த நிகழ்வையொட்டிய செய்தி ஒன்றில், செய்தி வாசிப்பாளரும் சின்னத்திரை நடிகையுமான அனிதா சம்பத் கடுமையாக விமர்சித்து கமெண்ட் செய்துள்ளார்.

நாட்டுக்காக போராடி: அதில், " நாட்டுக்காக போராட போனபோது தீவிரவாதிகளை நேருக்கு நேர் தாக்கும்போது நெஞ்சில் குண்டுபட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமா இருக்காங்க பாவம்" என பதிவிட்டுள்ளார். அனிதா சம்பத்தின் இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவிவருகின்றது. மேலும் அனிதா சம்பத்தின் இந்த பதிவுக்கு விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
புது விளக்கம்: இந்த கமெண்ட் இணையத்தில் தீயாக பரவியது. அனிதா சம்பத்துக்கு எதிராக பல விஜய் ரசிகர்கள் கமெண்ட் செய்தனர். இந்நிலையில் அனிதா சம்பத் தனது கமெண்டுக்கு புது விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், என்னோட கமெண்ட்ல விஜய் பத்தி இல்லவே இல்லை. அவரை நான் எங்கயும் தவறாக குறிப்பிடவேயில்லை. விஜயின் அரசியல் வருகை குறித்து நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன். மனைவி மற்றும் குழந்தைகளை கவனிக்காமல், இவ்வளவு வறுமையிலும் பணத்தைக் கொண்டுபோய் கள்ளச்சாராயம் குடுச்சு மருத்துவமனையில அட்மிட் ஆகியிருக்காங்க. அவர்களை ஊடகங்கள் தியாகிபோல் காட்டுகின்றது. நான் ஊடகங்களை நோக்கிதான் அந்த கேள்வியை எழுப்பினேன். இது விஜயை நோக்கி வைக்கப்பட்ட விமர்சனம் கிடையாது.

ஆதங்கமா இருக்கு: உலகத்துல எத்தனையோபேரு 5,10னு சேத்துவெச்சு பசங்கள படிக்க வெக்கறாங்க. அப்படிப்பட்ட அப்பாக்கள் இருக்குற நம்ம ஊர்ல இப்படி ஊதாரித்தனமா சுத்துறவங்கள பாக்கும்போது ஆதங்கமா இருக்கு. உயிரிழந்தவர்களை பாவம்னு சொல்வதை விட அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள்தான் பாவம். கடவுள் அவர்களுக்கு இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர மன உறுதியைக் கொடுக்கவேண்டும். எனது பதிவை சரியாக புரிந்துகொண்டவர்களுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.
விஜய் செய்தியில் ஏன் கமெண்ட் செய்யனும்? அனிதா சம்பத்தின் இந்த பதிவு குறித்து, பல இணையவாசிகள் நீங்கள் விஜயை குறிப்பிடவில்லை என்றால் எதற்காக விஜய் குறித்த செய்தியில் கமெண்ட் செய்யவேண்டும். நேற்று காலையில் இருந்து இந்த நிகழ்வு தொடர்பாக பல செய்திகள் வந்துள்ளது. அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் சென்று பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்த செய்தியில் கமெண்ட் செய்யாமல் விஜய் சென்று பார்த்தது தொடர்பான செய்தியில் மட்டும் கமெண்ட் செய்தது எதற்கு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











