'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' உட்பட டிவி சீரியல்கள் ஷூட்டிங் தொடங்கியது.. அனைவருக்கும் இன்சூரன்ஸ்!
சென்னை: சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகள் சென்னையில் இன்று தொடங்கியது.
கொரோனா வைரஸ் காரணமாக, மத்திய அரசு லாக்டவுனை பிறப்பித்தது. இதனால், கடந்த மார்ச் இறுதி முதல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

கட்டுப்பாடுகள்
இந்நிலையில், லாக்டவுனுக்காக பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சின்னத்திரை தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று, படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆரம்பத்தில் 20 பணியாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது.

தயாரிப்பாளர் கோரிக்கை
இவ்வளவு பேரை வைத்துக்கொண்டு ஷூட்டிங் நடத்த முடியாது என்று சின்னத்திரை தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்றுக் கொண்ட அரசு, 60 பேர் கொண்ட குழுவுடன் படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்தது. இருந்தாலும் பெரும்பாலான தொடர்களுக்கான படப்பிடிப்புகள் உடனே தொடங்கப்படவில்லை.

நடிகை குஷ்பு
இந்நிலையில் வரும் 10 ஆம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்க முடிவு செய்துள்ளோம் என்று சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க செயலாளரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்திருந்தார். அரசு வகுத்துள்ள விதிமுறை மற்றும் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

தொடர்களின் படப்பிடிப்பு
இதற்கிடையே, சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் அம்மன், ஓவியா, பொன்மகள் வந்தாள், கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, விஜய் டிவியில் வரும், இதையத்தை திருடாதே ஆகிய ஐந்து தொடர்களின் படப்பிடிப்புகள் இன்று தொடங்கியுள்ளன.

அனைவருக்கும் இன்சூரன்ஸ்
இந்தப் படப்பிடிப்பில் 45-ல் இருந்து 50 பேர் வரை பங்கேற்றுள்ளனர். அனைத்து நடிகர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர் தரப்பில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் 25 சிரீயல்களின் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கிறது. பெப்சி தரப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











