கவலைக்கிடமான நிலையில் மகேஷ் பாபுவின் தந்தை..வெண்டிலேட்டர் சிகிச்சை.. மருத்துவமனை அறிக்கை!
ஆந்திரா : நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் முன்னிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தி காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, அவரது ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

பழம் பெரும் நடிகர் கிருஷ்ணா
நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவுக்கு நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து, பதறிப்போன அவரது குடும்பத்தினர் ஹைதராபாத்தில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கான்டினென்டல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தீவிர சிகிச்சைப்பிரிவில்
அதில், நேற்று இரவு கிருஷ்ணா அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு,சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் CPR சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து சுயநினைவு திரும்பியது. தற்போது அவர், தீவிர சிகிச்சை பிரிவில், எங்கள் மருத்துவமனையின் இதய நோய் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், 24 மணிநேரம் கழித்துத்தான் எதையும் உறுதியாக சொல்ல முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு சினிமாவின் ஜாம்பவான்
79 வயதான கிருஷ்ணா, திரைத்துறையில் மூன்று சகாப்தங்களான நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த மிரட்டலான பல பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார். நடிகர் கிருஷ்ணா 2016 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஸ்ரீ ஸ்ரீ இல் படத்தில் நடித்திருந்தார்.

ரசிகர்கள் பிரார்த்தனை
கிருஷ்ணாவின் முதல் மனைவியும் மகேஷ் பாபுவின் தாயுமான இந்திராதேவி கடந்த மாதம் உயிரிழந்தார். அந்த சோகத்தில் இருந்தே மகேஷ் பாபு மீண்டு வராத நிலையில், தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியால் கவலையில் ஆழ்ந்துள்ளார். மகேஷ் பாபுவின் ரசிகர்கள் கிருஷ்ணா விரைவில் குணமடைய ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து, கிருஷ்ணா குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











