தெலுங்கில் அஜித், விக்ரம், சூர்யாவுக்கு குரல் கொடுத்த பிரபலம்... மாரடைப்பால் திடீர் உயிரிழப்பு
சென்னை: தமிழ், தெலுங்கு திரையுலகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக பணிபுரிந்தவர் ஸ்ரீனிவாச மூர்த்தி.
அஜித், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு தெலுங்கில் டப்பிங் கொடுத்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மலையாள நடிகர்கள் மோகன்லால், ஜெயராம், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.
டப்பிங் கலைஞர், டப்பிங் கலைஞர் சங்கத்தின் பொருளாளர் என வலம் வந்த ஸ்ரீனிவாச மூர்த்தி மாரடைப்பால் உயிரிழந்தது திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீனிவாச மூர்த்தி
1990களில் திரையுலகில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக தனது பயணத்தை தொடங்கியவர் ஸ்ரீனிவாச மூர்த்தி. 33 ஆண்டுகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக பணிபுரிந்துள்ளார். கோலிவுட் டாப் ஹீரோஸ் அஜித், சியான் விக்ரம், சூர்யா போன்றவர்களுக்கு தெலுங்கில் குரல் கொடுத்துள்ளார். முக்கியமாக சூர்யாவின் அனைத்து படங்களுக்கும் தெலுங்கில் குரல் கொடுத்தது ஸ்ரீனிவாச மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

மாரடைப்பால் உயிரிழப்பு
தெலுங்கு திரையுலகின் புகழ்பெற்ற டப்பிங் கலைஞராக வலம் வந்த ஸ்ரீனிவாச மூர்த்தி, மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சையில் இருந்த போதே மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவு தமிழ், தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீயான் விக்ரம் இரங்கல்
உயிரிழந்த ஸ்ரீனிவாச மூர்த்தி சென்னை வளசரவாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். ஸ்ரீனிவாச மூர்த்தியின் மறைவுக்கு டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இதனையறிந்த சீயான் விக்ரம் ஸ்ரீனிவாச மூர்த்தியின் மறைவுக்கு தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், நண்பர் ஸ்ரீனிவாச மூர்த்தியின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரது காந்தக் குரல் தெலுங்கில் எனது பாத்திரங்களுக்கு நம்பகத்தன்மையையும் அழகையும் கொடுத்தது. குறிப்பாக அந்நியன் படத்துக்கு அவர் டப்பிங் கொடுத்ததை மறக்கவே முடியாது என குறிப்பிட்டுள்ள விக்ரம், நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீனிவாச மூர்த்தி விக்ரமை போல பேசிக் காட்டிய வீடியோவையும் ஷேர் செய்துள்ளார்.

நடிகர் சூர்யா இரங்கல்
அதேபோல், நடிகர் சூர்யாவும் ஸ்ரீனிவாச மூர்த்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்தப் பதிவில், "தனிப்பட்ட முறையில் இது எனக்கு மிகப் பெரிய இழப்பு! ஸ்ரீனிவாச மூர்த்தி காருவின் குரலும் உணர்ச்சிகளும் தெலுங்கில் என் நடிப்புக்கு உயிர் கொடுத்தது. சீக்கிரம் சென்றுவிட்ட உங்களை நான் மிஸ் செய்கிறேன்" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். விக்ரம், சூர்யா தவிர்த்து மேலும் பல நடிகர்களும் ஸ்ரீனிவாச மூர்த்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











