சொத்துக்காக கொல்லப் பார்க்கும் மகன்.. செய்தியாளர்களை விரட்டி விரட்டி அடித்த மூத்த நடிகர்.. வீடியோ!
ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு. தெலுங்கு படங்களில் மட்டும் இல்லாமல், தென்னிந்திய சினிமாக்களிலும் அதிகம் நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல், மோகன் பாபு என்றாலே சினிமா உலகத்தினருக்கு நன்கு தெரியும் வகையில் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளார். இப்படியான நிலையில் இவருக்கும் இவரது மகன் மனோஜ் மஞ்சுவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள சொத்துத் தகராறு வீதிக்கு வந்துள்ளது. இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இப்படியான நிலையில், இது தொடர்பாக செய்து சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
நடிகர் மோகன் பாபு, தெலுங்கு திரையுலகில் மட்டும் இல்லாமல், தென்னிந்திய திரையுலகிலேயே மூத்த நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார். சூர்யா நடிப்பில் வெளியான சூரறைப் போற்று படத்திலும் மூத்த விமானப்படை அதிகாரியாக நடித்திருந்தார். இவருக்கும் இவரது மகனுக்கும் இடையில் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. அதாவது இவரது மகன் மனோஜ் மஞ்சுவும் மருமகள் மோனிகாவும் இணைந்து இவரது சொத்துக்களை மொத்தமாக அபகரிக்கத் திட்டம் தீட்டி செயல்படுவதாகவும், இதனால் தனது உயிருக்கும் தனது வீட்டில் உள்ளவர்களின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரது புகாருக்குப் பின்னரே இந்த விவகாரம் பூதாகரமாக மாறியது.

அதாவது இது தொடர்பாக அவர் அளித்த புகாரில், " கடந்த சில மாதங்களுக்கு முன்னர், எனது மகன் மனோஜ் மஞ்சு மற்றும் மருமகள் மோனிகா இருவரும் எங்கோ சென்றுவிட்டார்கள். மேலும் அவர்களின் 7 மாத கைக்குழந்தையை பணிப்பெண்ணின் பராமரிப்பில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். இப்படியான நிலையில் கடந்த 9ஆம் தேதி நான் எனது அலுவலகத்தில் இருந்தேன். அந்த நேரம் பார்த்து, ரங்காரெட்டி மாவட்டத்தின் ஜல்பல்லியில் உள்ள எனது வீட்டிற்குள் சுமார் 30 அடியாட்களுடன் நுழைந்துள்ளார்.

சொத்து விவகாரம்: மேலும், அடியாட்களை வைத்து, அங்கு பணியில் இருந்த பணியாட்களை மிரட்டியுள்ளார். மேலும் அந்த வீட்டினை அவர்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். மேலும் அடியாட்கள் இன்னும் வீட்டிலேயே இருக்கின்றார்கள். நான் எப்போது வீட்டிற்குச் சென்றாலும் என்னைத் தாக்கி, எனக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வீட்டினை, எனது மகன் அவரது பெயருக்கு மாற்றிக் கொள்ள திட்டம் தீட்டிக்கொண்டு உள்ளார். இதனால் நான் என்ன செய்வது எனத் தெரியாமல் உள்ளேன். எனக்கும் எனது வீட்டில் பணியாற்றுபவர்களுக்கும் உயிருக்கு பயந்துகொண்டு இருக்கின்றோம். எனவே, எனது மகன் மனோஜ் மஞ்சு மற்றும் மருமகள் மோனிகா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் எனவும்" குறிப்பிட்டிருந்தார்.

தாக்குதல்: இவரது புகார் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இப்படியான நிலையில், இது தொடர்பாக செய்தி சேகரிக்க, செய்தியாளர்கள் மோகன்பாபு வீட்டின் முன் திரண்டிருந்தார்கள். செய்தியாளர்களை நோக்கி வந்த மோகன்பாபு, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வந்ததும், செய்தியாளர்கள் வைத்திருந்த மைக்கினைப் பிடுங்கி, செய்தியாளர்களைத் தாக்கினார்.
வீடியோ: இது செய்தியாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. உடனே பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் மோகன்பாபுவைத் தடுத்தனர். இதுமட்டும் இல்லாமல், மோகன்பாபு செய்தியாளர்களைத் தாக்கும் வீடியோ இணையத்திலும் ஊடகங்களிலும் வேகமாக பரவியது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும், மோகன் பாபுவுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். செய்தியாளர்களைச் சந்திக்க விருப்பம் இல்லை என்றால் அமைதியாக இருக்கலாம். ஆனால் செய்தியாளர்களைத் தாக்குவது என்பது அநாகரீகமான செயல் மற்றும் தண்டனைக்குரியது எனவும் கூறிவருகின்றனர்.



Click it and Unblock the Notifications











