முடியப்போகிறது 2019.. பெரிய பட்ஜெட் படங்களுடன் மோத பயம்.. ஒரே நாளில் ரிலீசாகும் 10 படங்கள்!
இன்று ஒரே நாளில் பத்து படங்கள் ரிலீசாவதால் தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.
சென்னை: தமிழில் இன்று ஒரே நாளில் 10 படங்கள் ரிலீசாகின்றன.
டிஜிட்டல் தொழில்நுட்பம் பரவலாகிவிட்டதால் கோலிவுட்டில் இன்று வெளியாகும் படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. பெரிய படங்கள் வெளியாகும் அதேநாளில் சிறுபட்ஜெட் படங்களும் வெளியாவதால், அந்த படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனை வரைமுறைப்படுத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக விஷால் இருந்த போது ஒரு கமிட்டியை அமைத்தார். அந்த கமிட்டியின் அறிவுறுத்தலின்படி, வாரம் நான்கு படங்கள் என வெளியாகி வந்தது.
ஆனால் தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது. இன்று ஒரேநாளில் பத்து படங்கள் ரிலீஸ் அறிவித்துள்ளன. இதில் ஜடா, கேப்மாரி, காளிதாஸ் ஆகிய படங்களுக்கு மட்டுமே அதிக தியேட்டர்கள் கிடைத்துள்ளன.
அதேபோல், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசாகியுள்ள ஜுமாஞ்சியும் அதிக தியேட்டர்களை கைப்பற்றியுள்ளது. எனவே கருத்துகளை பதிவு செய், திருப்பதிசாமி குடும்பம், மெரினா புரட்சி, 50 ரூபா, சென்னை 2 பாங்காக், மங்குனி பாண்டியர்கள் ஆகிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் அதிக பிரச்சினை உள்ளது.
இந்த ஆண்டின் கடைசிக்கு முந்தைய வாரம் என்பதால் வேறு வழியில்லாமல் இத்தனை படங்கள் ரிலீசுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரம் கிறிஸ்துமஸ் விடுமுறை ஆரம்பமாகிறது.
இதையொட்டி, ஹீரோ, தம்பி ஆகிய பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாகின்றன. இருக்கும் தியேட்டர்கள் அனைத்தையும், இந்த இரண்டு படங்களுமே பிடித்துக்கொள்ளும். மேலும் ஜுமாஞ்சி, தபாங் 3, கடந்த வாரம் ரிலீசான குண்டு ஆகிய படங்களும் கணிசமான தியேட்டர்களில் ஓடும் என்பதால், இந்த வாரம் ரிலீசாகும் படங்கள் எல்லாம் காணாமல் போய்விடும்.
இதனால் சிறுபட தயாரிப்பாளர்கள் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்து அரசு நடவடிக்கை எடுத்தாலும், ரிலீஸ் பிரச்சினைக்கு தீர்வே ஏற்படாதா என அவர்கள் புலம்புகின்றனர்.


Click it and Unblock the Notifications











