'மெர்சல் நல்ல படம் இல்லேன்னாலும் இதுனாலதான் ஓடுது' - ஹைகோர்ட் நீதிபதிகள் அதிரடி
Recommended Video

சென்னை : விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு தடை விதிக்கவும், படத்திற்கு வழங்கப்பட்ட சென்சார் சான்றிதழை திரும்பப் பெறவும் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான மெர்சல் படம் தொடர்ந்து பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் சர்ச்சையைக் கிளப்பியதால் படம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
விஜய் நடித்துள்ள மெர்சல்' திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரியும் அதற்கு வழங்கியுள்ள தணிக்கைச் சான்றிதழை திரும்பப் பெறக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாள்களுக்கு முன்னர் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இறையாண்மைக்கு எதிராக
'மெர்சல்' படத்திற்கு எதிரான பிரச்னைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான கருத்துகள் மெர்சல் திரைப்படத்தில் இருக்கின்றன. குறிப்பாக, மத்திய அரசின் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன' என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனு விசாரணை
மெர்சல் தடை மீதான மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரான வழக்கறிஞர் அஷ்வத்தாமன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், இன்று இந்த வழக்கை விசாரித்தது. மெர்சல் படத்திற்கு இந்த வழக்குகள் விளம்பரமாகவே பயன்படுகின்றன என நீதிபதிகளும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதெல்லாம் தெரியுமா
மெர்சல் மீது வழக்குத் தொடர்ந்த மனுதாரர்களிடம் நீதிபதிகள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா... இந்தப் படத்தில் பொதுமக்களைப் பாதிப்பது போலான வசனம் இடம்பெற்றிருக்கிறதா என மனுதாரருக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார்கள் நீதிபதிகள்.

நல்ல படம் இல்லை
'மெர்சல் படம் நல்ல படம் எனச் சொல்லும் அளவிற்கு இல்லை. ஆனால், இதுபோன்ற விமர்சனங்களால் படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது' என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மெர்சல் படத்தின் சர்ச்சையால் தான் படம் பெரிதாகப் பேசப்பட்டு வசூலையும் குவித்து வருகிறது என்பது ஒப்புக்கொள்ள வேண்டியதே.

கேஸ் டிஸ்மிஸ்
'மெர்சல்' படத்திற்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்புகள் வருகின்றன... பொதுமக்களை பாதிக்கும் காட்சிகல் இடம்பெற்றிருக்கும் படங்களுக்கு வழக்கு தொடுங்கள் எனவும் கூறியிருக்கிறார்கள் நீதிபதிகள். மெர்சல் படத்திற்கு தடை விதிக்க வேண்டும், அந்தப் படத்திற்கு அளிக்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரித் தொடரப்பட்ட இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











