எனக்கு பிரச்சனை கொடுப்பது யார்? பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயன் புலம்பல்!
சென்னை: அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'தாய் கிழவி'. சிவகார்த்திகேயன் தயாரித்து இருக்கும் இப்படத்தில் வயதான பாட்டியின் தோற்றத்தில் ராதிகா நடித்துள்ளார். மதுரையில் முதல் நாள் முதல் ஷோவை மக்களோடு மக்களாக பார்த்த சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அதில், மதுரை மண்ணின் மைந்தர் இயக்கிய 'தாய் கிழவி' படத்தை மதுரையில் பார்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் இங்கு வந்து இருக்கிறோம். படத்தை பார்த்த அனைவரும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்திற்கும் கைதட்டி ரசித்து பார்ப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படத்தில் நிறைய எமோஷன் இருக்கிறது. ஒரு நல்ல விஷயத்தை இந்த படத்தில் சொல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் தான் இருக்கிறது. அனைவரும் தாய்க்கிழவி படத்தை குடும்பத்தோடு வந்து பாருங்கள்.

பெண்களுக்கான படம்: இந்த படம் திருப்தியான படமாக இருக்கிறது என படம் பார்த்த அனைவரும் சொல்லுகிறார்கள். இப்படி படம் பார்க்கும் அனைவரும் பாராட்டுவது என் மனதிற்கு திருப்தியை தருகிறது. இந்த திரைப்படத்திற்கு 'தாய் கிழவி' என பெயர் வைப்பதற்கு என்ன காரணம்? 'தாய் கிழவி' என்பது ஆதி பெண்களை குறிக்கும் சொல், ஒரு வீட்டிற்கு பெண்கள் எவ்வளவு முக்கியம், அவர்கள் எப்படி தெய்வத்திற்கு சமமானவர்களாக பார்க்கப்படுகிறார்கள் என்பதை குறிக்கும் சொல் தான் தாய்க்கிழவி. ஒவ்வொரு குடும்பத்திலும் தன் குடும்பதிற்காக பெண்கள் மிகவும் கஷ்டப்பட்டு அந்த குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள். இது இந்தியா முழுவதும் இருக்கும் பெண்களை பற்றிய படம் என்பதால், இந்தப் படமும் ஒரு பான் இந்தியா படம் தான். என்னை பொருத்தவரையில் ஒரு நல்ல படத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் நடிக்கும் படத்தில் செய்ய முடியாத சில விஷயங்களை நான் தயாரிக்கும் படத்தில் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.
யார் இடையூறு: இதைத்தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், ஒவ்வொரு பட வெளியீட்டிலும் எனக்கு இடையூறு செய்கிறார்கள் என்று சொல்லுகிறீர்களே, உங்களுக்கு இடையூறு செய்வது யார் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், பல செய்தியாளர்கள் அது யார் என்று சொல்லுங்க என கேட்கிறார்கள். நான் அதை சொல்வதால் பல youtube சேனல்களுக்கு வியூஸ் அதிகரிக்கும். நான் இப்படி சொல்வதற்கான காரணம் ஒருவரை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இல்லை. எவ்ளோ பெரிய தடைகளை தாண்டி வருகிறோம் என்று அனைவருக்கும் தெரியவேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.
பல தடைகள்: தொடர்ந்து இதுபோல கேள்வி வருவதார், இனி அப்படி சொல்வதை தவிர்த்து விடுகிறேன். ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல விஷயங்களையும் கடந்து வந்து இருப்போம். நான் இந்த இடத்தில் நிற்பதற்காக காரணம் ரசிகர்களாகிய நீங்கள் தான். உங்களால் தான் பல தடைகளை தாண்டி இந்த இடத்தில் நான் வந்து இருக்கிறேன் என்று அவர்களுக்கு சொல்வதற்காக தான், நான் அதை சொல்கிறேனே தவிர மற்றவர்களை குறை சொல்வதற்காக நான் அதை சொல்லவில்லை என்று சிவகார்த்திகேயன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











