வாரிசு நடிகர்களை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்கள் தயாரிக்கும் தாணு!
கலைப்புலி தாணு... இந்தப் பெயருக்கு தமிழ் சினிமாவின் பிரமாண்டம், பப்ளிசிட்டி புலி என்றும் பெயர்கள் உண்டு.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அத்தனைப் பேரையும் வைத்துப் படமெடுத்த தாணு, அடுத்து தயாரிக்கும் மூன்று படங்களும்... பிரபு, கார்த்திக் மற்றும் முரளியின் மகன்கள் ஹீரோவாக நடிப்பவை.

அரிமா நம்பி
பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவை முதலில் ஹீரோவாக்க விரும்பியவர் தாணுதான். ஆனால் அவர் அதற்கு முன்பே கும்கியில் அறிமுகமாகிவிட்டார். அடுத்து வந்த இவன் வேற மாதிரி படத்தையும் லிங்குசாமி நிறுவனத்துக்கே செய்தார். அவருக்கு மூன்றாவது படம்தான் இந்த அரிமா நம்பி. ஆனந்த் சங்கர் இயக்கும் இந்தப் படத்துக்கு சிவமணி இசையமைத்துள்ளார்.

இந்திரஜித்
கார்த்திக்கின் மகன் கவுதமின் முதல் படம் ஊத்திக் கொண்டாலும், அவர் கைவசம் படங்களுக்குக் குறைவில்லை. 4 படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். அவற்றில் ஒன்றுதான் இந்திரஜித். தாணுவின் மகன் கலாப்பிரபு இயக்கும் இரண்டாவது படம். சங்கர் எஷான் லாய் இசையமைக்கிறார்.

கணிதன்
மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வாவை வைத்து தாணு தயாரிக்கும் படம் கணிதன். இந்தப் படத்துக்கும் சிவமணிதான் இசை. சந்தோஷ் என்பவர் இயக்குகிறார்.

புதுமுகங்களுக்கும் வாய்ப்பு
பிரமாண்டமாய் படமெடுக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து இறங்கிவந்திருக்கிறாரா தாணு?
"இல்லை... அப்படி இல்லை. படத்தின் கதைக்கேற்பத்தான் பட்ஜெட். இப்போது நான் தயாரித்து வரும் மூன்று படங்களுமே பெரிய பட்ஜெட் படங்கள்தான். அருமையான கதை. ஹீரோக்களாக நடிக்கும் மூன்று தம்பிகளுக்குமே நல்ல எதிர்காலம் உள்ளது. இனி வரும் காலங்களில் புதுமுகங்களுக்கும் நிறைய வாய்ப்பு தரப் போகிறேன்," என்கிறார்.


Click it and Unblock the Notifications











