குடும்பம் நடத்த தெரியலயா? தலைவன் தலைவி படத்தை பாருங்க.. ஆனால்.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!
சென்னை: இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், யோகி பாபு, சரவணன், தீபா சங்கர், ரோஷினி ஹரிப்பிரியா, சென்ட்ராயன், செம்பன் வினோத், ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தலைவன் தலைவி. படம் நேற்று அதாவது ஜூலை 25 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரசிகர்கள் மத்தியில் பாசிடிவான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், அதில், " படத்தின் ஆரம்பத்தில் விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் திருமணம் செய்து கொள்கிறார்கள். கொஞ்ச நாளில் இருவருக்கும் இடையில் சண்டை வருகிறது. அதனால் பிரிந்து விடுகிறார்கள், கொஞ்ச நாட்களில் சேர்ந்து விடுகிறார்கள். அதன் பின்னர் மீண்டும் சண்டை போடுகிறார்கள், பிரிகிறார்கள். சேர்கிறார்கள். மீண்டும் மீண்டும் மீண்டும் சண்டை போடுகிறார்கள், பிரிகிறார்கள், அதன் பின்னர் சேர்கிறார்கள். படம் முடிவதற்குள் எப்போவாவது முழுவதுமாக பிரிகிறார்களா என்றால் அதுதான் இல்லை, இப்படி வித்தியாசமான கதை கொண்டதுதான் இந்த படம்.

இது பாண்டிராஜ் படம் என்பதால், கிளைமாக்ஸில் ஹீரோயினும் ஹீரோவும் பிரிகிறார்கள் என்றால், கொரியன் படத்தில் வருவதைப் போல, வெட்டிக்கொண்டும் குத்திக் கொண்டுமா சாவார்கள்?. கேட்டால், குடும்பம் என்றால் அப்படித்தான் இருக்கும், சண்டை போடுவார்கள், சேர்ந்து கொள்வார்கள். குடும்பம் என்றால் சண்டை போடுவார்கள் தான், ஆனால் இந்த படத்தில் காரண காரியமே இல்லாமல் சண்டை போடுகிறார்கள், காரண காரியமே இல்லாமல் சேர்ந்து கொள்கிறார்கள். பைத்தியமா அவர்கள்? அவர்கள் பைத்தியமா படம் பார்க்கிற நாம பைத்தியமா?
ஓவர் ஆக்டிங்: சண்டை போட்டால் கூட பரவாயில்லை, கத்துகிறார்கள் வெறுமனே; ஸ்பீக்கர் கிழிவதைப் போல கத்துகிறார்கள். விஜய் சேதுபதி எல்லாம் கத்திக்கொண்டே இருக்கிறார், நித்யா மேனனும் விஜய் சேதுபதிக்கு போட்டியாக கத்திக்கிட்டே இருக்கிறது. படத்தில் வரும் எல்லா கதாபாத்திரமும் காட்டு கத்தா கத்திக் கொண்டு இருக்கிறார்கள், ஒரே கூச்சலாக உள்ளது. வழக்கமாக நன்றாக நடிக்கும் விஜய் சேதுபதி, நித்யா மேனன் உள்ளிட்டோர் வாங்கிய பணத்துக்கு மேல நடித்து விட்டார்கள், படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரமும் ஓவர் ஆக்டிங் தான். படத்தில் கதையே இல்லாமல், கதாநாயகனும் கதாநாயகியும் பிரிந்தார்கள் - சேர்ந்தார்கள், பிரிந்தார்கள் - சேர்ந்தார்கள் என்பதையே படமாக எடுத்து வைத்துள்ளார்கள்.

மொத்தத்தில் படம்: ஹீரோ விஜய் சேதுபதி நித்யா மேனனைப் போய் பெண் பார்க்கிறார். இவர்களை இளம் ஜோடிகள் என படத்தில் காட்டுகிறார்கள். தமிழ் சினிமாகாரர்கள் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் எதையும் செய்யத் துணிந்து விட்டார்கள். குலதெய்வம் கோவில், புரோட்டா கடை, கதாநாயகி வீடு என மூன்று லொக்கேஷனிலேயே படத்தை முடித்துவிட்டார்கள். படத்தில் நல்ல மெசேஜ் சொல்லி உள்ளார்கள், குடும்பம் என்றால் என்ன, குடும்பம் நடத்துவது எப்படி என இந்த படத்தை பார்த்து தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தால் கட்டாயம் இந்த படத்தைப் போய் பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் குடும்பம் நடத்துவதில் பி.ஹெச்.டி. முதலில் படம் எடுப்பது எப்படி என நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள் என இருப்பவர்கள், இந்த பக்கம் போய்விடாதீர்கள்" எனக் கூறியுள்ளார். இவரது இந்த விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











